Saturday 8 February 2014

கோதுமை ரவை கொழுக்கட்டை- உடனடி ரெசிப்பி...!



தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தாளிக்க

காய்ந்த மிளகாய் - 2

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை :

• கோதுமை ரவையை உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்.

• தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து வேக வைத்துள்ள கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

• இந்த உருண்டைகளை மீண்டும் இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை ரவை உருண்டை ரெடி.

தனது சம்பளத்தில் ஆதரவற்றோருக்கு இல்லம் கட்டுகிறார் ஹன்சிகா..!



நடிகை ஹன்சிகா, ஒரு தெலுங்கு படத்தில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுகிறார்.

தத்து குழந்தைகள்

ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கு இப்போது 25 வயது ஆகிறது. அவரால் 25 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டு, அவருடைய பராமரிப்பில் உள்ளனர்.

இவர்களுக்காக, மும்பையில் ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் நீண்ட கால ஆசை. அந்த ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

தெலுங்கு படம்

ஹன்சிகா இப்போது, ‘துர்கா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நாகார்ஜுன் மகன் நாக சைதன்யா நடிக்கிறார்.

இந்த படத்தில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் ஹன்சிகா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுவதற்கு செலவிடுகிறார். இதற்காக அவர் முதலில் ஒரு நிலத்தை வாங்குகிறார். பின்னர், அந்த நிலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுவது என்று ஹன்சிகா திட்டமிட்டு இருக்கிறார்.

எடை குறைப்பு

தமிழ்–தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் அவர் இப்போது இளம் கதாநாயகர்களின் ஜோடியாகவே நடித்து வருகிறார். அவர்களுக்கு பொருந்துவது போல் தனது உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக, அவர் சாப்பாட்டின் அளவை குறைத்து விட்டார்.

குழந்தைகள் நீண்ட நேரம் தூங்கினால்...!



மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது.

இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்தபின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குழந்தைகளின் நினைவாற்றலை ஸ்திரப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன்மூலம் கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்கவிடாதபோது அவர்களின் கற்றல் திறன் குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் பங்கேற்ற 14 குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் மூளையின் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயற்படுவதையும் இந்த ஆய்வாளர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.

தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை தாங்கள் மருத்துவரீதியில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரிபெக்கா ஸ்பென்ஸர்.

குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும் என்று கூறும் அவர், மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர் பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாக கூறுகிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.

மழலை வயதில் குழந்தைகள், இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து வைத்துக்கொள்வதற்கு சராசரியாக ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள் தூங்குவது அவசியம்.

 எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக கருதுகிறார் மருத்துவர் ராபர்ட்.

மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தங்களின் குழந்தையின் மழலைக்கற்றலை ஊக்குவிக்க நினைக்கும் பெற்றோர்கள், அவர்களை மதியநேரம் குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள் என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும் பரிந்துரை.

அதிக நேரம் உட்காராதீர்கள்…! - ஓர் அதிர்ச்சியான தகவல்கள்..!



நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். குறைந்தது 7 மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்கள். 2 மணி நேரம் டி.வி. முன்னால் உட்கார்ந்திருக்கிறீர்கள். 2 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு இருக்கிறீர்கள். வேறு எங்கெங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து. 45 நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் முதுகுவலி, டிஸ்க் பிரச்சினைகளை தோன்றும்.

மனித சமூகத்தை ஆணி அடித்தது போல் உட்கார வைத்து அவர்களை நோயாளிகளாக மாற்றிய பெருமை கம்ப்யூட்டர் புரட்சிக்கு உண்டு. கம்ப்யூட்டர்களை அலுவலகங்களில் உபயோகிக்கத் தொடங்கியதும் மனிதனின் உடல் இயக்கம் குறைந்தது. வேலைகளின் இடையே எழுந்து நிற்பதையும், நடப்பதையும்கூட இது தடுத்து நிறுத்திவிட்டது. லேப்டாப் மற்றும் செல்போன் போன்றவை மனித உடல் இயக்கத்தை முடக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக உட்காரும்போது உடலில் எந்த பாகம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் தெரியுமா? முதுகெலும்புதான் அழுத்தத்திற்குள்ளாகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அதன் அடிப்பகுதிதான் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு அதிகமான நேரம் உட்கார்ந்திருந்தால், அடிப்பகுதியில் உள்ள லம்பார் டிஸ்க்கின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, கெட்டியாகும். டிஸ்க் நரம்பினை நெருக்கவும் செய்யும். அதனால்தான் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் பல்வேறு விதமான வலி நிறைந்த பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றார்கள்.

கழுத்து வலி, கை கால் மரத்துப்போகுதல், தோளில் தசைப் பிடித்தல் போன்ற பாதிப்புகள் உருவாகும். அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு கொலஸ்ட்ரால், டைப்- 2 வகை சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அமர்ந்தே வேலைபார்க்கும் போது கொலஸ்ட்ராலை சக்தியாக மாற்றும் என்சைம்களின் செயல்பாடு நின்றுபோகும்.

தசைகளின் இயக்கம் குறைந்துபோவதால் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுழற்சியும் குறையும். எப்போதும் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களின் இடுப்பும், கால்களும் பலம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் திடீரென்று கீழே விழும் நிலை ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாகும். முறிவு ஏற்படும் வாய்ப்பும் அதிகம். உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்களில் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் அவர்களை பற்றிய ஆய்வுகளும் அதிகரித்து வருகின்றன.

லூசியானாவில் நடந்த ஆய்வு ஒன்றில் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு பத்து வருடங்கள் கடக்கும்போது, மற்றவர்களைவிட குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு இரட்டிப்பாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். மலத்துவாரத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் 44 சதவீதம் அதிகமாக இருக்கிறது. தொடர்ச்சியாக உட்கார்ந்தே வேலை பார்ப்பது புகைப்பிடிப்பதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது இன்னொரு ஆய்வு.

ஆஸ்திரேலியாவில் 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெலிவிஷன் முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள். புகைப்பிடிக்கும்போது ஒவ்வொரு சிகரெட்டும் ஆயுளில் 11 நிமிடங்களை குறைக்கிறது. நியூசிலாந்தில் நடந்த ஆய்வில், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களின் கால்களின் ரத்தக்குழாய் உள்ளே ரத்தம் கெட்டியாவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்களுக்கு அதிக உணவு தேவையில்லை. அவர்கள் அளவின்றி சாப்பிட்டால் அது கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். அது பல்வேறு நோய்களுக்கு காரணமாவதோடு, அகால மரணம் வரை கொண்டுபோய்விடும். 6 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களைப் பற்றி அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நடந்தது.

அதில் அவர்கள் பெண்ணாக இருந்தால் 3 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களைவிட இறப்பதற்கான சூழல் 94 சதவீதம் அதிகம் என்கிறார்கள். ஆண்களுக்கு இது 48 சதவீதமாக உள்ளது. அதாவது உட்கார்ந்தே வேலை பார்க்கும் பெண்களுக்கு ஆண்களைவிட அதிக பாதிப்பு என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

எங்கும் எதிலும் கோச்சடையான் - போட்ட பணத்தை எடுப்பதில் தீவிரம்..!



ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இது அனிமேஷன் படமாக இருந்தாலும், தமிழக ரசிகர்களைப்பொறுத்தவரை புதுமையான விசயம் என்பதால், ரஜினியை எப்படித்தான் காட்டப்போகிறார்கள் என்பதையும்தானே பார்ப்போமே என்று ரசிக வட்டம் ஆவல் கொண்டு நிற்கிறது.

இந்தநிலையில், ஏப்ரல் 11ந்தேதி படம் வெளியாகிறது என்று அறிவித்தவர்கள், இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத வகையில் வித்தியாசமான விளம்பர யுக்திகளை கையாளப்போகிறார்களாம். அதாவது, 10 லட்சம் கோச்சடையான் கார்பன் மொபைல்களை தென்னிந்தியாவிலுள்ள 27 ஆயிரம் ஷோரூம்களில் இறக்குமதி செய்கிறார்களாம்.

மேலும், இந்த மொபைல்களை விளம்பரப்படுத்தும் பொருட்டு, தொலைக்காட்சிகள் 6000 வினாடிகள், எப்எம்மில் 60 ஆயிரம் வினாடிகள், மற்றும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்தும் பெரும் பரபரப்பு கூட்டுகிறார்களாம்.

இதனால் எங்கும் எதிலும் கோச்சடையான் என்கிற ரேஞ்சுக்கு வித்தியாசமான வினோதமான பப்ளிசிட்டிகளை ஆரம்பிக்கப்போகிறார்கள். பல வருடங்களையும், பல கோடிகளையும் தின்றுவிட்ட கோச்சடையானை எப்பாடுபட்டாவது ஓடவைக்க வேண்டும் எனபதில் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது படக்குழு!

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு..!



தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

01. Probationary Officers பயிற்சிக்கு -50

02. Clerk பயிற்சிக்கு – 50

பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்:

01. Probationary Officers – 25

02. Clerk – 25

சம்பளம்: Probationary Officers பணிக்கு ரூ. 14,500 – 25,700 + DA, HRA ,CCA

Clerk பணிக்கு ரூ. 7,200 – 19,300 + DA,HRA மற்றும் இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 01.02.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PC/Ex-Servicemen பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Online/Offline தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014

மேலும் தேர்வுகள், பாடத்திட்டங்கள் தேர்வு தேதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

காங்கேயம் காளை - பேரக்கேட்டாலே அதிரும் ..!



காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம்.

அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர் . அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார். கார்த்திகேயன் ஈரோட்டில் காங்கேயம் காளைகள் வளர்க்கும் பண்ணையை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது . http://www.kangayambull.com/index.htm

மேலும் வரலாற்று ரீதியான தகவல் அவர் நமக்கு தருகையில்..
இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது .

இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும் .

டாப் இயக்குனர்களுடன் நடிக்க தல, தளபதி திடீர் போட்டி..!



டாப் இயக்குனர்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் அஜீத், விஜய் இடையே போட்டி எழுந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை கேட்டு இப்படத்துக்கு அஜீத் பொருத்தமாக இருப்பார் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அஜீத்திடம் ஷங்கர் பேசினார். அவரும் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் ஷங்கர், அஜீத் இருவரும் முதன்முறையாக இணைய உள்ளனர்.

கிரீடம் விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்த விஜய் அடுத்து நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து மீண்டும் துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கடந்த வாரம் இதன் ஷூட்டிங் கொல்கத்தாவில் தொடங்கியது.

சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார். இப்படத்துக்காக விஜய் சொந்த குரலில் பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஷங்கர், முருகதாஸ் என டாப் இயக்குனர்கள் படத்தில் நடிக்க அஜீத், விஜய் தயாராகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

பெண் இயக்குனர்கள் த்ரில்லர் படம் இயக்க கூடாதா..? சிவானி..!



பெண் இயக்குனர் என்றால் கமர்ஷியல், த்ரில்லர் படங்கள் இயக்கக் கூடாதா என்று சீறினார் சிவானி. சோன்பப்டி என்ற படத்தை இயக்குகிறார் சிவானி. அவர் கூறியதாவது: சோன்பப்டி என்று தலைப்பு வைத்தது ஏன்? என்கிறார்கள். நகரம் முதல் கிராமம்வரை உள்ள அனைவருக்கும் தெரிந்த பெயர் என்பதால் இதை வைத்தேன்.

நகரத்து பின்னணியில் காமெடி, கிரைம் த்ரில்லர் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஹீரோ. இவர் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர். நிரஞ்சனா ஹீரோயின். மனோபாலா, பட்டிமன்றம் ராஜா, சோனியா, நீது, பிரியா, ஷாஹில் என 55 நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார், தனு பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். கோல்டன் மூவி மேக்கர் தயாரிப்பு. நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லையென்றாலும் சினிமாவில் நிறைய ஆர்வம் உண்டு. ஐ.டி.கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான் அதை ராஜினாமா செய்துவிட்டு இயக்குனராகி இருக்கிறேன்.

பெண்களை மையப்படுத்திய கதையை ஏன் இயக்கவில்லை என்கிறார்கள். பெண் இயக்குனர் என்றால் இப்போதைய டிரெண்டுக்கு படம் எடுக்க முடியாது என்று சிலர் புகார் சொல்கிறார்கள். அது தவறான வாதம். ஏற்கனவே சில பெண் இயக்குனர்கள் மாறுபட்ட படங்களை இயக்கி பேசப்பட்டிருக்கிறார்கள். இது கமர்ஷியல் படம்தான். இவ்வாறு சிவானி கூறினார்.

ஜெட் வேகத்தில் நயன்தாராவின் மார்க்கெட்..!



படத்திற்கு படம் நயன்தாராவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பறக்கிறது.
நயன்தாரா தமிழில் நடித்த படம் ‘ராஜா ராணி’ படம் சூப்பர் ஹிட்டானது, இதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தை தொடந்து உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம், காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில், பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய பாண்டிராஜ், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசி நயனை தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்கி இருக்கிறார்.

அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கும் நயன்தாராவிடம் பேசியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஹீரோக்களை எல்லாம் மிஞ்சும் வகையில் படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டிக்கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா.

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!



முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

முதுமை என்னும் வேதனையும், வலியும்! By டாக்டர் செந்தில் வசந்த்..!



மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது. அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது.

வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத் தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.

கரணம் 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படுகிறார்க்ள்.அவர்களின் வலிகள், மற்ரவ்ர்களின் வலிகள் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

 அதற்க்கான அணுகுமுறை, சிகிச்சை எல்லாமே வேறு என்கிற வலி என்று விளக்கம் சொல்லும் மருத்துவர்கள் ”இந்த வயோகத்தால வரக்கூடிய வலி திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம், வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி…

இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது.

உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை.. எல்லா மருந்துகளும் அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம். சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும்” என்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு..!



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது.

திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் தலைமையில் நடந்தது.

இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நிவாஸ் என்கிற பக்தர் தொடர்பு கொண்டு, சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தமது கைக்குழந்தைகள் பாலுக்காக அழும்போது செய்வதறியாது தவிக்கின்றனர். இதற்கு தேவஸ் தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

‘இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. இனி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தைகளுக்கு தடை யின்றி 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்’ என அதிகாரி கோபால் தெரிவித்தார். இதற்கான உத்தரவையும் அவர் உடனடியாகப் பிறப்பித்தார்.

அதுக்கு ரெடியாகிறார் மனோசித்ரா..!



‘அவள் பெயர் தமிழரசி’ யில் அறிமுகமான காஞ்சிபுரத்து தமிழ்ப் பெண் மனோசித்ரா, நந்தகி என்ற பெயரையும், மனுமிகா என்ற பெயரையும் தூக்கி எறிந்து விட்டார். இனி ஒரிஜினல் பெயரில்தான் நடிப்பாராம். இப்போது அஜீத் தம்பியாக விதார்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், விதார்த் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே ‘மைனா’ படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியது. காலம் செய்த கோலம், அமலா பால் ஹீரோயினாகி விட்டார்.

இப்போது ஐதராபாத்தில் நடந்து வரும் அஜீத் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் மனோசித்ரா, ‘ஒருமுறை பார்த்தேன்’, ‘நேற்று இன்று’, ‘தாண்டவக்கோனே’ படங்களின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். தவிர, மலையாளத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கு, கன்னடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறதாம். பாலிவுட்டுக்கு செல்ல என்ன வழி என்றும் கேட்கிறார். இப்படி எல்லா மொழிகளிலும் திறமை காட்டத் துணிந்துவிட்ட அவர், ‘நான் அக்மார்க் தமிழ்ப் பொண்ணு என்ற ஒரே காரணத்தினால தான் பெரிய அளவுல முன்னுக்கு வர முடியலயோ என்னவோ.

வேற மாநிலத்துல இருந்து வரும் ஹீரோயின்களுக்கு தரும் முக்கியத்துவத்தை எனக்கும் கொடுத்தா, நானும் ஒரு திறமையான நடிகையா ஜெயிச்சுக் காட்டுவேன்’ என்கிறார். கதைக்கு தேவைப் படும் என்றால், ஓரளவு கவர்ச்சியாக நடிக்கவும் பச்சைக்கொடி காட்டும் மனோசித்ராவுக்கு நடிப்பு தவிர, ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம்.

வீட்டை ஒழுங்குபடுத்துவது, புடவைகளை புதிய டிசைன்களில் வடிவமைப்பது என்று, ஓய்வு நேரத்தையும் உருப்படியாகக் கழிக்கிறார்.

ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி..!

நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி..!


பாரத ரிசர்வ் வங்கி, நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி அளித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள்:-

டாட்டா கம்யூனிகேஷன்ஸ் பேமண்ட் சொல்யூஷன்ஸ், முத்தூட் பைனான்ஸ், பிரிசம் பேமண்ட்ஸ் மற்றும் வக்ராங்கி ஆகிய நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்றுள்ளன. இதில் வக்ராங்கி நிறுவனத்தை தவிர இதர மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது.

பெரும்பாலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) வங்கிகளுக்கு சொந்தமானவை. அதேசமயம், வங்கி சாரா நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் அவற்றால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஏ.டி.எம். இயந்திரங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.

முன்பு வங்கிகள் மட்டுமே ஏ.டி.எம்.களை நிறுவ பாரத ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. வங்கிகளால் நாட்டில் உள்ள எந்த இடத்திலும் ஏ.டி.எம். மையங்களை அமைக்க முடியும். இருப்பினும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏ.டி.எம். மையங்கள் மிகவும் குறைவாக உள்ளன.

இதற்கு தீர்வு காணும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில், 2012 ஜூன் மாதம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். மையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டது.

கிராமப்புறங்களில்...


ஒயிட் லேபிள் ஏ.டி.எம். மையங்கள் தொடங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களை சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டாயம் அமைக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் நுழைந்த சிறுவன்....!




இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது ‘ஃபேஸ் புக்’ பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது:-

புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று ‘எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்’ என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர்.

குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன். கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி, ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீனை சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு, எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு, நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்... காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது? குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை. எனது மகன் அமீன், இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலில் சீயான் படம்..?



மெகா இயக்குநர், மெகா இயக்குநர், சிறந்த நடிகர் மூவரும் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் அது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், படம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

 காரணம்... வேறு யாருமில்லை. படத்தின் நாயகனேதானாம். படத்தின் பட்ஜெட் நூறு கோடிகளை விழுங்கி, மேலும் கேட்டு நிற்கும் தருணம் இது. இருப்பதையெல்லாம் பீறாய்ந்து படத்துக்கு முதலீடு செய்து வருகிறார் தயாரிப்பாளர்.

சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டே பழக்கப்பட்ட அவர், இரு படங்களை சொல்லாமல் கொள்ளாமல் ஒத்திப் போட்டுவிட்டார்.

இதை உணர்ந்த இயக்குநர் தன் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல், சொந்தக் காசையும் கடனாகக் கொடுத்துள்ளாராம்.

'நான்தான் படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். எனவே அந்தப் பணம் உங்களுப் பயன்படட்டும்' என்று கூறிவிட்டாராம்.

இப்படியொரு சூழலில், எனக்கு சம்பளத்தை எடுத்து வையுங்க என முரட்டுப் பிடிவாதம் காட்டுகிறாராம் ஹீரோ..

முதல் முறையாக அவரைப் பற்றி இப்படியொரு செய்தி வருவதால், நம்புவதா வேண்டாமா என யோசிக்கிறார்கள் மீடியாக்காரர்கள்.

எந்த நடிகையும் காதலை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரியா ஆனந்தும் அப்படித்தான்....




அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார்.

தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனியாக சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம்.

காதல் காட்சிகளிலும் எல்லை மீறி நெருக்கம் காட்டுகிறார்களாம். காதல் கிசு கிசுக்கள் பற்றி பிரியா ஆனந்திடம் கேட்ட போது நட்பாகத்தான் பழகுகிறோம் என்றார். அதர்வாவும் நானும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரங்கள்.

 படப்பிடிப்பில் கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கம் காட்டினோம். இதை வைத்து காதல் என்கின்றனர். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என்றார்.

எந்த நடிகையும் காதலை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரியா ஆனந்தும் அப்படித்தான் என்றார் படக்குழுவை சேர்ந்த ஒருவர்.

மரணம் குறித்த பயம் சரியானது தானா..?

மரணம்(death):


மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன.

ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது,

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன்.

டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது.

அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்.

அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார்.

மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன்.

திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

ரன்பீருடன் லிப் லாக் செய்ய ஆசை..! - ஆன்ட்ரியா



பாலிவுட் நடிகருடன் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஆன்ட்ரியா வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியுள்ளார்.

நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகிறார் ஆன்ட்ரியா.

இந்நிலையில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இங்க என்ன சொல்லுது படத்தில் மொத்தம் 4 மணிநேரம்தான் படப்பிடிப்பு, சிம்பு 2 மணிநேரம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதற்குள் இருவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பிவிட்டனர்.

சிம்புவின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. மேலும் லிப் சீனில் நடிப்பது என்றால் பாலிவுட் பட உலகில் ரன்பீர் கபூர்தான் பெஸ்ட். ஆனால் தமிழ் நாயகர்கள் யாருடன் என்பது பற்றி அவர் கூறவில்லை.

மேலும் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை என்றால் எனக்கு லண்டன் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று கூறியுள்ளார் ஆன்ட்ரியா.

பேய்களும், பிசாசுகளும் கூட டைம் ஸ்லிப் (Time slip) ல் சேருமோ..!

டைம் ஸ்லிப் (Time slip)


நீங்கள் உங்கள் வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். சட்டென்று தெரு திரும்பியதும் ஓட்டு வீடுகள் தென்படுகின்றன. உங்களுக்கு சற்று அசௌகரியமாக இருக்கிறது. புழுதி நிறைந்த தெருவைக் கடந்து போகும் போது வித்தியாசமாய் எதையும் உணராமல் நடக்கிறீர்கள். எதிரில் ஒருவர் வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு மாட்டை ஓட்டிச் செல்கிறார். அந்த தெருவைக் கடந்த பின் தான் மனதை நெருடுகிறது அந்த காட்சி. திரும்பச் சென்று பார்த்தால் அப்படி ஒரு தெருவே உங்கள் கண்ணில் தென்படவில்லை.

இதை டைம் ஸ்லிப் என்கிறார்கள். அதாவது நீங்கள் காலம் கடந்து பின்னோக்கி சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.

Charlotte Warburton என்பவர் தன் கணவரோடு கடைத் தொகுதிக்குச் சென்றார். காப்பி கொட்டை வாங்குவதற்காக கணவரை விட்டு விட்டு வழக்கமாய் வாங்கும் சூப்பர் மார்கெட்டுக்குச் சென்றவர் கண்ணில், கடையின் இடது பக்க சுவரில் ஒரு சின்ன Cafe ஒன்றின் கதவு தெரிந்தது. இதற்கு முன்பு அப்படி ஒரு Cafeயை அவர் அங்கு பார்த்ததில்லை. அதனுள் நுழைந்த போது அந்த Cafe முற்றிலும் பழைய பாணியில் மரச்சுவர்களையும் விளக்குகளையும் கொண்டிருந்ததை உணர்ந்தார். அந்த நேரம் அவருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.
நீண்ட ஆடை அணிந்த இரு பெண்கள் ஒரு மேசையின் எதிரெதிரே அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார்கள். மற்ற மேசைகளில் பழங்கால உடையணிந்த ஆடவர்கள் அமர்ந்திருந்தார்கள். அது ஒரு சாதாரண காட்சியாகவே அவருக்குத் தோன்றியது. அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தாலும் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்பதோ, அவர்கள் அருந்திக் கொண்டிருந்த காபியின் மணம் தனது நாசியை எட்டவில்லை என்பதோ கூட அந்த நேரம் அவரது மூளைக்கு எட்டவில்லை.

இது எதைப் பற்றிய யோசனையும் இன்றி அவர் அந்த Cafeயை விட்டு வெளியேறி தன் கணவருடன் வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த முறை அந்த பக்கமாய் வந்த போது, அந்த Cafeக்கு செல்ல நினைத்து தேடிய போது தான் அப்படியொன்று அங்கே இல்லாதது தெரிந்தது. விசாரித்ததில் அந்த சூப்பர் மார்கெட் வருவதற்கு முன் அப்படி ஒரு Cafe இருந்தது தெரிய வந்தது. அவர் காலத்தின் பின்னோக்கி பயணித்து, அந்த சூழ் நிலையுடன் ஒன்றியிருந்திருக்கிறார். இது நடந்தது ஜீன் 1968ல்.

பொதுவாக இது போன்ற டைம் ஸ்லிப்பிற்கு உட்படுபவர்களுக்கு

o தங்களைச் சுற்றி இருக்கும் இடம் தட்டையாவது போல அதாவது ஒரு சித்திரத்திற்குள் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

o சுற்றியிருக்கும் சப்தங்கள் சட்டென்று குறைகிறது.

o சற்றே அசௌகரிய உணர்ச்சி ஏற்படுகிறது.

o அந்த சூழலில் உள்ள மற்றவர்களுடன் கலந்து பழக முடிகிறது

மேலே இருக்கும் நிகழ்ச்சியில் அனைத்தும் இல்லையென்றாலும் சப்தம் குறைந்திருக்கிறது, அந்த சூழ்நிலை மனிதர்களுளின் ஊடாக இயல்பாக சென்று வர முடிந்திருக்கிறது. சென்ற இடத்தில் சாப்பிட்டு தூங்கி எழுந்து வந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

சற்றே வித்தியாசமான சில டைம் ஸ்லிப்புகளும் உண்டு.

Harry Ross என்ற 64 வயது ஆடவர் தன் குடும்ப புகைப்படத்தின் பின்னே தெளிவற்ற வேறொரு முகம் தெரிவதைக் கண்டார். அதை உற்று பார்த்த்தில் அது 42 வருடங்களுக்கு முன்பு இருந்த, இளமையான அவர் தான், என்பது தெரிந்தது. புகைப்படத்தை மனவியல் நிபுணரிடம் காட்டிய போது அவரும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது பல வருடங்களுக்கு முன்பு இருந்த அவர் மறுபடி காட்சியளித்திருக்கிறார். ஏற்கனவே நடந்த ஒரு காட்சி அங்கே மறுபடி அரங்கேறி இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் பேய்களும், பிசாசுகளும் கூட டைம்ஸ்லிப்பில் சேருமோ!

பண்ணையாரும் பத்மினியும் - திரைவிமர்சனம்



குறும்படமாக வெளிவந்த கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார்கள். நான் குறும்படம் பார்க்கவில்லை, அதனாலோ என்னவோ இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டு பார்க்காமல் இயல்பாகப் பார்க்க முடிந்தது. படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.

ஒரு பண்ணையாருக்கு தற்காலிகமாக ஒருவர் தனது பத்மினி காரை பார்த்துக்க கூறி கொடுத்து செல்ல, அதன் மீது காதலாகிறார்கள் பண்ணையாரும் அவரது ஓட்டுனரும். இறுதியில் பத்மினி கார் என்ன ஆனது? என்பதை ரொம்ப அழகாக கூறி இருக்கிறார்கள்.

பண்ணையார் ஜெயபிரகாஷ் மற்றும் துளசி தம்பதியினர் கிராமத்தில் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக இருப்பவர்கள். கதை கொஞ்ச காலம் பின்னாடி நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் எதையுமே இவர் தான் முதலில் வாங்கி அறிமுகப்படுத்துவார். வானொலி, தொலைக்காட்சி இப்படி.. அட! கழிவறையை கூட இவர் தான் திறப்பு விழா செய்வார் என்றால் பார்த்துக்குங்க.. grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie இப்படிப் பட்டவர் வீட்டிற்கு பத்மினி காரை பார்த்துக்க கூறி அவரது உறவினர் கொடுத்து விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

இதற்கு ஓட்டுனராக வருபவர் தான் விஜய்சேதுபதி. திரும்ப ஒருமுறை கதையின் நாயகனாக வந்து இருக்கிறார். ரம்மியில் விட்டதை இதில் பிடித்து விட்டார். இவரும் ஜெயபிரகாஷும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேருமே காரின் மீது ரொம்ப பிரியமாக இருப்பார்கள். படம் பார்க்க பார்க்க நாமும் அந்தக் காரின் மீது காதலாகி விடுவோம் என்பது இதன் திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

பொல்லாதவன் படத்தில் பைக் எப்படி முக்கியக் கதாபாத்திரமாக வந்ததோ அதே போல இதில் கார். கார் வைத்து இருக்கும் எவரும் குறிப்பாக யார் ரசித்து பராமரிக்கிறார்களோ அவர்கள் இந்தப் படம் பார்த்து தங்கள் காரைப் பார்த்தால் ஒரு காதலோடு பிரியத்தோடு தான் பார்ப்பார்கள். அந்த மேஜிக்கை இந்தப் படத்தின் திரைக்கதை கொண்டு வருகிறது.

இதில் பெரிய ஆச்சர்யம் இவர்களின் காரின் மீதான அன்பு மிகை நடிப்பாக தோன்றாதது தான். பொதுவா நாம நினைப்போமே.. “யோவ் போங்கய்யா! சும்மா ஊர்ல இல்லாத காரை வைத்து இருக்காங்களா!” என்று.. படம் முழுக்க இதுவே இருந்தாலும், அது மாதிரி ஒரு காட்சியில் கூட நினைக்கத் தோன்றவில்லை. அந்தக் காரை படம் பார்ப்பவர்களும் நேசிக்கத் துவங்கி விடுகிறார்கள்.

ஜெயபிரகாஷ் கார் ஓட்டப் பழக விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கோ எங்கே இவர் பழகினால் நம்மை ஓட்டுனராக இருப்பதில் இருந்து கழட்டி விட்டு விடுவாரோ என்று வேண்டும் என்றே கார் ஓட்டப் பழக்குவதை தாமதப் படுத்துவார். ஒரு காட்சியில் ஜெயபிரகாஷ் கார் ஓட்டிப் பழகும் போது ஒரு பாறையில் மோதி விடுவார். உண்மையிலேயே அவர்களை விட படம் பார்த்தவர்கள் தான் பதட்டம் ஆகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், நான் உட்பட grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie .

இதில் ஜெயபிரகாஷ், துளசி அன்பு காதல் படத்தின் பலம். கல்லூரிக் காதல், பள்ளிக்கூட காதல் என்று போய்க்கொண்டு இருக்கும் காலத்தில் இவர்களின் காதல் படம் பார்க்கும் எவரையும் ரசிக்க வைக்கும். இருவரின் அன்பையும் காதலையும் அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தெரியாதது போல அன்பை வெளிப்படுத்துவது அருமை. இவர்கள் வயதில் உள்ளவர்கள் இந்தப் பகுதிகளை நிச்சயம் ஏக்கமுடன் தான் பார்ப்பார்கள். துளசி சில இடங்களில் மிகை நடிப்பு போல தோன்றினாலும் உறுத்தவில்லை.

விஜய் சேதுபதி ஒரு ஓட்டுனர் என்பது மட்டுமல்ல, முதலாளி ஜெயப்பிரகாஷை விட காரை அதிகமாக காதலிப்பார். பார்த்து பார்த்து துடைத்து வைப்பதை பார்க்கும் எவரும் தங்களின் காரின் நினைவு வந்தாலே இந்தப் படத்தின் வெற்றி தான். காரின் சொந்தக்காரர் வந்து கேட்டு விட்டால் என்ன பண்ணுவது என்று இருவரும் கவலைப்படுவது, ரொம்ப எதார்த்தமான நடிப்பு. ஒரு கட்டத்தில் சண்டையாகி பின் திரும்ப இருவரும் ராசியாவது அருமை. அங்கே அன்பு என்ற ஒன்றே பிரதானமாக இருக்கும்.

நான் சென்னையில் இருந்த போது பல புதிய வகை பைக் இருந்தும் (அப்போது பல்சர் பிரபலமாக இருந்தது) Splendor+ தான் வாங்குவேன் என்று வாங்கி, அதன் ஹேன்ட் பார் சிறியதாக மாற்றி, துடைத்து துடைத்து வைப்பேன். அதில் போவதென்றால், எனக்கு என்னமோ பென்ஸ் / ஜாகுவார் காரில் போவது போல ஒரு நினைப்பு. ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கிளம்பினால், நான் தான் ராஜா மாதிரி நினைப்பேன். நெடுஞ்சாலையில் செல்லும் போது என்னமோ திரைப்படத்தில் ஹீரோ போவது போல எனக்கு ஒரு கெத்து இருக்கும். அவ்வளவு ரசித்து ஓட்டுவேன். வேறு யாரும் ஓட்டக் கேட்டால் அரை மனதோடு தான் கொடுப்பேன். சரியாக ஒட்டுவார்களா? என்ற பயத்துடனே. இதெல்லாம் எனக்கு படம் பார்க்கும் போது மனதில் வந்து போனது.

ஜெயபிரகாஷ் பெண்ணாக நீலிமா. இவருக்கு வேலையே ஒவ்வொருமுறை கணவருடன் வரும் போதும் ஏதாவது ஒரு பொருளை இங்கே இருந்து கேட்டுப் பெறுவது தான். எனக்குப் பெரிய சந்தேகம்?! இந்த நீலிமாக்கு வயசே ஆகாதா!! நானும் கிட்டத்தட்ட 10 வருடத்திக்கும் மேல் பார்க்கிறேன், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார். கதாப்பாத்திரம் கூட கிட்டத்தட்ட அப்படித் தான்.. கொஞ்சம் கோபம் கொஞ்சம் அழுகை. இவர் பேசும் முறை ஒரு பண்ணியாரின் மகள் என்ற அந்த கெத்து நன்றாக பொருந்தியுள்ளது.

ஜெயபிரகாஷ் பண்ணையில் வேலை செய்யும் நபருமாக கார் க்ளீனருமாக!!! வரும் ஒரு நபர் பட்டப் பெயர் பீடை. இவர் என்ன வாழ்த்தினாலும் புட்டுக்கும் grey பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie . நகைச்சுவைக்கு இவர் தான். நன்றாக நடித்து இருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல இவர் உதவி இருக்கிறார். நாங்கள் தோட்டத்தில் இருந்த போது அங்கே 10 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்தார்கள். ஒவ்வொருவரும் குறைந்தது 20 – 25 வருடம் இருந்தவர்கள். அனைவருமே ரொம்ப பிரியமாக இருப்பார்கள். இப்பவும் எங்கள் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அனைவரும் வந்து வேலை செய்வார்கள். எங்கள் சொந்தக்காரர்களே “உங்க வீட்டில் சொந்தக்காரங்க கூட்டத்தை விட வேலை ஆளுங்க கூட்டம் தான் அதிகம் இருக்கு” என்று கூறுவார்கள். இதற்கு நாம் அவர்களிடம் அன்பாக இருந்தால், அவர்களும் உண்மையாக இருப்பார்கள் என்பது தான் காரணம். விஜய் சேதுபதி மற்றும் இந்தப் பீடை கதாபாத்திரமாக இருப்பவரை பார்க்கும் போது எனக்கு இதெல்லாம் நினைவிற்கு வந்தது.

விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யா (ரம்மி கதாநாயகி), நல்ல பொருத்தம். இவர்களின் பகுதியும் ரசிக்கும் படி இருக்கிறது. பாவாடை தாவணியில் இவரைப் பார்க்க ரொம்ப நன்றாக உள்ளது. இனிமேல் இவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் காரணம், இரண்டு படங்களில் ஒன்றாக நடித்தது தான். ரம்மி நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வெளி வந்தது, இடையில் நிறைய விஜய் சேதுபதி படங்கள் வெளிவந்து விட்டது ஆனால், இது இரண்டும் தொடர்ந்து வந்தது போல ஆகி விட்டது.

சினேஹா டார்லிங் நட்புக்காக சில நிமிடங்கள் வந்து செல்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ரொம்ப நன்றாக நடித்து இருந்தார், அனுபவம் பேசுகிறது. இவரைப் போல அட்டகத்தி தினேஷ். இவரின் கதை கூறுவதில் தான் படமே தொடங்குகிறது. கடைசியில் சில நிமிடமே வருகிறார் ஆனால், அந்த சில நிமிடங்களிலும் பல முகபாவனைகளைக் காட்டி பச்சக்குன்னு மனதில் ஒட்டிக்கொள்கிறார். நிஜமாகவே!

ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. நான் பார்த்தது பெரிய திரையரங்கம் என்பதால், ரொம்ப ரசித்துப் பார்த்தேன். பாடல்களை நான் முன்பு கேட்கவில்லை என்பதால் இது பற்றிக் கூற முடியவில்லை. பின்னணி இசை இரைச்சலாக இல்லாமல் இருந்தது. முதல் பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது போல தோன்றுகிறது. காட்சிகள் எளிதாக ஊகிக்க முடிகிறது.

எடிட்டிங்கும், திரைக்கதையும் தான் படத்தின் பலம். வெறும் காரை மட்டும் வைத்துக்கொண்டு சுவாரசியமாக ஒரு படத்தை கொடுப்பது என்றால் சாதாரண விசயமில்லை. இதில் தனது முதல் முயற்சியிலேயே இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார். படத்தை சோகமாக முடித்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது. நல்ல வேளை அப்படியில்லாமல் நன்றாக முடித்து இருக்கிறார்கள்.

ஆபாசமில்லை, குத்துப் பாடல்கள் இல்லை, வெறுப்பான காட்சிகள் இல்லை, கடுப்பான நகைச்சுவை இல்லை, ஹீரோயிசம் இல்லை, வெளிநாட்டுப் பாடல்கள் இல்லை, ஹீரோயினை மோப்பம் பிடிக்கும் வேலை இல்லை. கதை உள்ளது, அருமையான திரைக்கதை உள்ளது, படம் நெடுக அன்பு உள்ளது, ரசிப்புத் தன்மை உள்ளது, கதையோட நகைச்சுவை உள்ளது. இதுக்கு மேல வேற என்னங்க வேண்டும்?

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். கார் வைத்துள்ளவர்கள் குறிப்பாக காரை ரசித்துப் பராமரிக்கிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

காமராஜரின் திட்டமும் திடமும்..!



அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.