Friday 14 February 2014

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்..! மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

சாதித்த தமிழ் மாணவன்..!


விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார்.

 ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும்.

வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்...

‘குர்குரே உள்ளிட்ட உணவு பாக்கெட்டுகளுக்குத் தடை..!

‘குர்குரே உள்ளிட்ட உணவு பாக்கெட்டுகளுக்குத் தடை..!- ஹைகோர்ட் ஆர்டர்


இமாச்சல பிரதேசத்தில் வேப்பர்ஸ் மற்றும் குர்க்குரே பேன்ற `ஜங் புட்’களை விற்க தடை விதிக்க ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் / டால்டா போன்றவற்றையும் பிளாஸ்டிக் பேக்குகளில் விறபனை செய்வதை தடைசெய்யப்படும் என்று அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ‘ஜங் புட்’ களை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால் குடிநீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே அம்மாநில அரசால் இது போன்ற பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமிக்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் ஜங் புட் வகைகளை விற்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்களால் அம்மாநில ஹைகோட்டில் மனு தாக்கல் செய்யபப்ட்டது.


அந்த மனு நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் வி.கே. சர்மா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ’ஜங் புட்’ களை விற்க தடை விதித்துள்ளனர்.மேலும், சமையல் எண்ணெய் / டால்டா போன்றவற்றையும் பிளாஸ்டிக் பேக்குகளில் விறபனை செய்வதை தடைசெய்யப்படும் என்று அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதிக நேரம் டி.வி பார்த்தாலே சர்க்கரை நோய் வரும்...! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

அதிக நேரம் டி வி பார்த்தாலோ அல்லது ஷிப்ட் மாறி வேலை பார்த்தாலே சர்க்கரை நோய் வரும்...!


பெண்கள் அதிகநேரம் உட்கார்ந்த நிலையிலே “டிவி’ நிகழ்ச்சிகளை பார்ப்பதால், இன்சுலின் சமச்சீரின்மை ஏற்படுகிறது.

இது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. கொழுப்பைக் கரைக்கும் என்சைம் உற்பத்தி குறைகிறது. தினமும் 5 மணிநேரத்திற்கு மேல் “டிவி’ பார்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் கூட போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

இந்நிலையில் ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போதும் உடலை கண்டிப்பாக சர்க்கரை நோய் தாக்குமாம். இப்படியெல்லாம் யார்தான் புரோகிராம் செய்ததோ தெரியாது, நம் உடல் எனும் சிஸ்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரப்பதும், அதற்கான பணிகளை செய்வதும் வழக்கம் போல் நேரம் தவறாமல் நடந்து வருகிறது. புறச்சூழலுக்கு ஏற்ப தன் சிஸ்டத்தை மாற்றிக் கொள்வது மற்றும் நோய் தாக்குதலுக்கு ஏற்ப எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என தன் வேலையை மிகவும் அறிவுப் பூர்வமாக உடல் தனக்குத் தானே செய்து கொள்கிறது.

உயிர்ச்சங்கிலியில் ஒரு கன்னி அறுந்தாலும் அது இயற்கையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கும். ஒரு உயிரினம் அழிக்கப்படும் போது அதற்கான விலையை இந்த சமூகம் கொடுக்கத் தவறுவதில்லை. இதே போல் தான் உடலும். கணினியில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் செயல் இழக்கிறது. தான் சேமித்து வைத்ததை எல்லாம் தொலைத்து விடுகிறது. கணினியால் தனக்குத் தானே ஆன்ட்டி வைரஸை உற்பத்தி செய்து கொள்ளத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரியும்.

உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே அனுமானித்து அதனால் தடுக்க முடியும். அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, தூக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேரம் ஷிப்ட் முறையில் மாறும் போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது என்கிறார் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்கள்

இது குறித்து,”அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவு ஷிப் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார்மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. பகல் மற்றும் இரவு ஷிப்ட் என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்.



பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர ஷிப்ட் பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது. எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே ஷிப்ட் வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஷிப்ட் வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும். டீ, காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் டென்சன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்,” என்கிறார்கள்

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா..!



தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. எதிர்கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ள அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக கூறினார்.முன்னதாக இந்த ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், ”அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து சதி செய்கின்றன.

மத்திய அரசுக்கு தலை வணங்க மாட்டேன்.இதனால் டில்லி சட்டசபையில் கடைசி கூட்டத்தொடர் இதுவாக இருக்கும்” என குறிப்பிட்டவர் தன் கட்சி அலுவலுலகம் வந்து ஆலோசித்திவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்று 48 நாட்கள் ஆன நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லியில் சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று சட்ட மந்திரி சோம்நாத் பார்தியை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் முழுமையாக நடக்கவில்லை.இரண்டாவது நாளான இன்று ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கவர்னரும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவர்னரின் அறிவுரையை மீறி இன்று பிற்பகல் மசோதாவை தாக்கல் செய்ய அரசு முயன்றது. அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்ப்டடது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வருவதை எதிர்க்கவில்லை என்றும், முறையான சட்ட நடைமுறைப்படி இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

பின்னர் 3.20க்கு அவை மீண்டும் கூடியபோது ஜன் லோக்பால் மசோதாவிற்கு அனுமதி அளிக்க மறுத்து கவர்னர் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர் அதன் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் முயற்சித்தார். ஆனால், இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து கோஷமிட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கிடையில் மசோதாவை முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அத்துடன் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி மந்திரிகள் வலியுறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது. 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ள சட்டசபையில் மசோதாவிற்கு எதிராக 42 பேர் வாக்களித்துள்ளனர். 27 பேர்கள் ஆதரவாக ஓட்டளித்தனர். இதனை அடுத்து மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் டில்லி சட்டசபையில் கெஜ்ரிவால் பேசுகையில்,”சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. நேற்று சட்டசபையில் ஏற்பட்ட ரகளைக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஆவணங்கள் கிழிக்கப்பட்டதும், மைக்குகள் உடைக்கப்பட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போதிய அனுபவமில்லாத நாங்கள் உரிய பாடம் கற்றுக்கொண்டோம். அவையில் பேசுவதற்கு கூட எதிர்க்கட்சிகள் அனுமதி மறுக்கின்றன.ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து சதி செய்கின்றன. மத்திய அரசுக்கு தலைவணங்க மாட்டேன். டில்லி சட்டசபையின் கடைசி கூட்டத்தொடராக இதுவாக இருக்கும் . மத்திய அரசின் தவறான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அம்பானி மீது வழக்கு பதிவு செய்ததால், ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வது தோல்வியடைய செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல் மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார் என்றும் இதையடுத்து டெல்லி அமைச்சரவையும் ராஜினாமா செய்து. ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பி. டெல்லி பேரவையை கலைக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


பின்னர்ராஜினாமா செய்தது பற்றி தொண்டர்களிடம் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் விளக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பெரும் முயற்சி மேற்கொண்டோம்.ஆனால் அதை நிறைவேற்ற முடியாததால் ராஜினாமா செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல்..! - அசத்திய இந்திய விஞ்ஞானி



இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.

இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை.

அப்படி மனிதனால் தயாரிக்கப் பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic).இந்நிலையில் ‘பைரோலிசிஸ்’ முறையில் பிளாஸ்டிக் பைகளை எரித்து இதில் இருந்து 30 முதல் 50 சதவீதம் கச்சா எண்ணையை எடுத்து டீசல் தயாரித்துள்ளார்.அவரது பெயர் பிரஜேந்திர குமார் ஷர்மா. அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இல்லினாய்ஸ் ஆய்வு மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார்.

டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, நாப்தா, கேசோலின், மெழுகு, உராய்வு ஆயில் உள்ளிட்டவற்றையும் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விரைவில், பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதும் முதல் கட்டமாக நுாறு கோடி 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடப்பட்டு சோதனை முயற்சியாக வேறுபட்ட வானிலை மாற்றங்கள் கொண்ட கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இந்த நோட்டுகள் புழக்கத்தில் விடப்படப் போவதும் குறிப்பிடத்தக்க்து,

"வாய் துர் நாற்றத்திற்கு பாய் சொல்லும் ‘ஆயில் புல்லிங்’....!



“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.


நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.


இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.


மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.


அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.


இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.


பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’


இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.


‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.


நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.


‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.


இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘

நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.


அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.


நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.


இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!


எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!


எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.


வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.


வாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.


"வாய் துர் நாற்றம்" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


வாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்க..!



ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.

இதுப்போன்று வேறு: ஆண்களே! பொடுகு தொல்லை தாங்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க…

அதுவும் ஒருசில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.

இங்கு ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை தலையைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் சூப்பர் எண்ணெய்கள்!!!


*ஆயில் மசாஜ்


இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து,


*தேங்காய் பால்


தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


*மருதாணி இலைகள்


மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.


*நெல்லிக்காய்


முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.


*வெந்தயம்


வெந்தயம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்.


*வெங்காயம்


சிகிச்சை வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.


ஆயுளை குறைக்கும் உடல் பருமன் - ஆய்வில் தகவல்..!



அதிக எடையுடன் இருக்கும் ஒருவரின் ஆயுட்காலம் குறைகிறது என்றும், பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபாயம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சென்னை நிலைமை: மேற்கத்திய நாடுகளில் கடந்த முப்பது ஆண்டுகளாகவே உடல் பருமன் என்பது ஒரு உடல் ஆரோக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆனால், உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், அதிக அளவு நொறுக்குத் தீனி உண்பது போன்றவற்றால் வளரும் நாடுகளிலும் உடல் பருமன் பிரச்னை தற்போது அதிகமாகிறது.

சமீபத்தில், சென்னை நகரில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வின் போது, மாணவர்களில் நான்கில் ஒருவர் கூடுதல் எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் போதிய அளவுக்கு விளையாட்டுகளில் பங்கேற்காததும், நொறுக்குத் தீனி அதிகம் உண்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்று தமிழகத்தில் உடல்பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னையை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சத்யவாணி தெரிவித்துள்ளார்.