Sunday 16 February 2014

நடிகை மீது செக் மோசடி வழக்கு...!



சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் ககன்போத்ரா. இவர், சென்னை ஜார்ஜ் டவுன் 8–வது குற்றவியல் கோர்ட்டில், தாக்கல் செய்துள்ள 2 செக் மோசடி வழக்குகளில் கூறியிருப்பதாவது:–

நடிகை புவனேஸ்வரி என்ற அனு, அவரது தாயார் சம்பூரணம் ஆகியோர் என்னிடம் ரூ.85 லட்சம் கடன் வாங்கினார்கள். இந்த தொகையை காசோலைகள் மூலம் இருவரும் திருப்பிக்கொடுத்தனர். இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, புவனேஸ்வரி, சம்பூரணம் ஆகியோரது வங்கி கணக்குகளில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. எனவே அவர்கள் 2 பேரும் வேண்டுமென்றே, தங்கள் வங்கி கணக்குகளில் பணம் இல்லை என்று தெரிந்தும், இந்த காசோலைகளை கொடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி விசாரித்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புவனேஸ்வரி, சம்பூரணம் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 11–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி உத்தரவிட்டார். நடிகை புவனேஸ்வரி ‘சூப்பர்டா’, ‘கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் நான் சூப்பர் ஸ்டாராக வேண்டும் - நடிகை அலியா பட்



மும்பை பாலிவுட் நடிகை அலியா பட் தான் ஒரு சூப்பர் ஸ்டாராக  வேண்டும் என்பதே என ஆசை என  பேட்டி அளித்துள்ளார்.

 இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

நான்  ஸ்டூடன் ஆப் தி இயர்  திரைப்படம் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனேன்.எனது அடுத்தப்படமாக ஹைவே என்ற திரைப்படம் வர இருக்கிறது.

இந்த படத்தின் வெளியீடிற்காக காத்து கொண்டு இருக்கிறேன். முதலில் நான் ஒரு நல்ல நடிகையாக இருக்க வேண்டும் பின்னர் சூப்பர் ஸ்டாராக உயரவேண்டும் என்று அலியா பட் கூறியுள்ளார் தற்போது நான் பூஜ்யத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - சந்தோசத்தில் அட்லி...!



இரண்டு விருதுகள் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் இயக்குனர் அட்லி.

‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அட்லி.

ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது.

இந்தப் படத்தை சிறந்த முறையில் இயக்கியமைக்காக அண்ணாமலை யூனிவர்சிட்டி சார்பில் நடந்த ஒரு விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், சென்ற ஆண்டின் கண்டெடுக்கப்பட்டவருக்கான விருதையும் அட்லிக்கு வழங்கியுள்ளனர்.

அட்லி, ஒரு படத்தை தான் இயக்கியிருக்கிறார், ஆனால் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

இதுக்கு பேர் தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

மக்கள் என்ன முட்டாள்களா..?திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு..!



திமுக மாநாட்டில் பேசிய நடிகை குஷ்பு முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசும்போது கடுமையாக சாடிப் பேசினார். அவரது பேச்சில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவாலும் விட்டார்.

 உணர்ச்சிகரமாக பேசிய குஷ்புவின் பேச்சில் கொதிப்பு தெறித்தது.. கொந்தளிப்பு துடித்தது... முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசுகையில் அவரது நாடி நரம்பு புடைக்க ஆவேசமாகப் பேசினார்.

அந்த ஆவேசத் துளியிலிருந்து சில...

ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார். நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு. யாருக்கும் எதுக்கும் நாம பயப்படவேண்டாம். எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது. அத்தனையையும் பொய் என்று நிரூபிப்போம்

வெற்றி திமுகவுக்கு மட்டும்தான். போன தேர்தலில் தமிழ் மக்கள் அவுங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தது போதும்.

அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவுங்களுக்குத்தான்னு நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான். 40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப் பாருங்கள்

அம்மா உணவகமா? தமிழ்நாட்டுல எத்தனை குடும்பங்கள் இருக்கு. அத்தனை பேருக்கும் சோறுபோட முடியுமா?

மக்கள் என்ன முட்டாள்களா உங்களை நம்புவதற்கு? என்று கோபமாகக் கேட்டார் குஷ்பு.

அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் - அடித்து சொல்கிறார் சிம்பு...!



அஜீத் குமார் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுவதுண்டு.

 அதற்கு ஒரு சிலர் சூப்பர் ஸ்டார் ஒருவர் தான் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர்.

மற்றும் சிலர் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிம்பு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது அஜீத் தான் என்று சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர். இதை அவரே பல முறை பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்தில் நான் என்னை பார்க்கிறேன். படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி அஜீத் ஒரு ஹீரோவாக்கும் என்று கூறி பெருமைப்படுகிறார் சிம்பு.

வாலு படத்தில் வரும் லவ் என்றவன் பாடல் டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து சிம்பு மகிழ்ச்சியில் உள்ளார். அந்த பாடலை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை கண்டுகளித்துள்ளனர்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் அஜீத்தின் பிறந்தநாளான மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

வாழைப்பழத்தோலை வைத்து நீரை சுத்தமாக்கலாமாக்கும்..!



இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ரசாயனம் மூலம் குடிநீரை சுத்திகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன.

இது பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதார சீர்கேட்டையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே குறைந்த தரத்திலான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை அளிக்கின்றன. இத்துடன் தங்களது தயாரிப்புகளில் எந்தெந்த ரசாயனம், எந்த விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடுவதில்லை. இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கான கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற சுத்திகரிப்பானை நுகர்வோருக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.

இந்நிலையில் இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!என்று செய்தி வெளியாகியுள்ளது! என்ன? ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ…

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!

தமிழினப் படுகொலைக்கான புதிய ஆதாரத்தை வெளியிடுகிறது “சேனல் 4′..!



“தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் கற்பழித்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது.

இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும்.”

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,2009-ஆம் ஆண்டு இலங்கை போரின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. தமிழ்ப் பெண்கள் 15 பேரை இலங்கை ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்துள்ளனர்.

சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகின்றனர்.இந்தக் கொடிய சம்பவம் சேனல்- 4 தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் இலங்கை அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

49 நாள் துடப்பகட்டை கட்சியின் சரித்தரம்..!



 49 நாள் தொடப்பக்கட்ட கட்சியும் – கூட்டணி தர்ம குண்டாந்தடிகளும்….அதோ இதோன்னு முடிந்தேவிட்டது 49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம். இது என்ன கொடுமை என பலர் கேட்க மனதுக்குள் ஒரு ஓரமாக கூட்டணி தர்மம் என்று புருடா விட்டு தன் மகன் / மகள் / பேரன் / தோழி என அத்தனை தவறுகளுக்கு டெல்லியின் காலில் சரணாகதி அடைந்து 5 வருஷம் குப்பை கொட்டி கடைசி நாளில் சினிமா வில்லன் போல அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்து சீ சீ அந்த கட்சி சரியில்லை என அறிவிக்கும் செல்ஃபீஷ் கட்சியின் நடுவில் இந்த ஆள் எவ்வளவோ பரவாயில்லை. ஆயினும் இவரின் போக்கு சரியானதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லுவேன், காரணம் – டெல்லி என்பது ஒரு யூனியன் பிரதேசம் – தமிழ் நாடு போல ஒரு தனி மாநிலம் அல்ல!-

சென்னை போன்ற ஒரு நகரத்துக்கு ஒரு மேயருக்கு என்ன பவர் இருக்குமோ அந்த அளவு மட்டுமே டெல்லி சி எம்முக்கு இதை தெரிந்தும் சி எம்மாய் பொறுப்பு ஏற்றது பெரிய தவறு. ரோட்ல போற ஓனானை எடுத்து பேன்ட்டுக்குள் விட்டுகிட்டு குத்துதே குடையுதேனு சொல்ற கதை தான் இது. சி எம் என்று தெருவில் இறங்கு போராடினாரோ அன்றே அத்தனை கொழுத்த அரசியல் வியாதியும் நகைக்க தொடங்கினர். ஒபமாவை எச்சரிக்கிறென்னு கொலைக்காரன் பேட்டையில் இருந்து குரல் விடும் லோக்கல் கார்ப்பரேஷன் கவுன்சிலரை போல்….!!!

இப்படி தோற்றது கேஜ்ரிவால் இல்லை – இளரத்தம் தான் தோற்றது. அடுத்த முறை எவ்வளவு நியாயஸ்தனாய் இருந்தாலும் மக்கள் ஓட்டு போட ஒரு முறை அல்ல இரு முறை யோசிப்பார்கள். மாற்றம் கொண்டு வர முதலில் அரசியல்வாதியாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அடுத்து மாற்றத்தை கொண்டு வர எந்த களம், அதை இந்தியா மாதிரி ஒரு டெமாகரட்டிக் கன்ட்ரியில் எவ்வளவு சாத்தியம் என தெரியாமல் இறங்கியது பெரிய முட்டாள்தனம். இதை கேஜ்ரிவால் மட்டும் அல்ல – இந்தியாவின் பிரதமராய் இருக்கும் ஒரு ஆள் கூட சில சமயம் செய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சி எதிர் கட்சி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

அதனால் ஒரு மசோதாவை அரங்கேற்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு சவால் வெளி நாட்டு சக்திகள் அல்ல உள்ளூர் சகதிகளே. 4 – 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சட்டசபைக்கு போக தயங்கும் பழுத்த அரசியல்வாதியும், நாக்குமூக்கா தலைவனும் டெல்லிக்கு போய் பிரதமரை போய் சந்தித்து தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யுங்களேன் என்று சொல்வ்து எத்தனை பேடித்தனம். இன்னொருவர் முதல்வர் மாதக்கணக்கில் கோடை வாசம்…….. இதெல்லாம் தான் திராவிட சாபங்கள் எத்தனை ஜென்மங்கள் ஆகுமோ இது எல்லாம் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் வர‌...!

வறட்சியால் சருகாகி நிற்கும் கொடைக்கானல் காடுகள்...!

வறட்சியால் சருகாகி நிற்கும் கொடைக்கானல் காடுகள்: காட்டுத் தீயைத் தடுக்க வனத்துறை தீவிரம்:-


 இந்தியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ விபத்துகள் மூலம், ரூ. 440 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொடைக்கானல் காடுகள், வறட்சியால் இந்த ஆண்டு சருகாகி நிற்பதால், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர், இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை வளம் கொண்ட இயற்கைக் காடுகள், மூங்கில் காடுகள் அதிகளவில் உள்ளன. மாவட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த கொடைக்கானல் வனப்பகுதி, சிறந்த சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியில் அழகிய தாவரங்கள், மரங்கள் மட்டுமின்றி, யானைகள், சிறுத்தைப் புலி, புள்ளி மான், காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட அரியவகை விலங்குகள் அதிகளவில் உள்ளன.

கொடைக்கானல் வனப்பகுதியின் ஒரு பகுதி தமிழக எல்லையாகவும், மறு பகுதி கேரள எல்லையாகவும் உள்ளதால், ஆண்டு முழுவதும் இரு வனப்பகுதிகளிலும் வனவிலங்குகள் இடம் பெயர்வு அதிகளவு உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக மழையில்லாமல் கொடைக்கானல் வனப்பகுதியில் மரங்கள், செடி கள் காய்ந்து சருகாகி நிற்பதால் இந்த ஆண்டு வனப்பகுதியில் காட்டுத் தீ அதிகளவு பரவி வருகிறது.

கொடைக்கானலில் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனால், முன்கூட்டியே தற்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் கொடைக்கானல் சாலைகளில் சுற்றுலா பயணிகள் சிகரெட், தீக்குச்சிகளை அணைக்காமல் கீழே போட்டுச் செல்வதால் மரங்கள், செடி கொடிகளில் காட்டுத் தீ பற்றி அதிகளவு வன வளம், விலங்குகள் அழியும் நிலை ஏற்படுகிறது.


இந்த ஆண்டு ஏற்கனவே வனப்பகுதி சருகாகி நிற்பதால் தீ விபத்தை தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்கவும் கொடைக்கானல் பெருமாள் மலை, சோத்துப்பாறை, டம்டம் பாறையில் காட்டுத் தீ கண்காணிப்பு கோபுரங்களை நிறுவி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், தீ தடுப்புக் கோடு அமைத்து, தீ பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதுக்குள் ஒளித்து வைத்த பிட்டு பேப்பர்: 20 வருடங்களுக்கு பின்பு கண்டுபிடிப்பு…!



சவுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் எழுதும் தேர்வில் மோசடி செய்வதற்காக காதினுள் குறிப்பு தாள் (பிட் பேப்பர்) வைத்திருந்தது 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியே தெரிந்துள்ளது.

குறித்த நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நபர் தொடர்ந்து சில நாட்களாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது தான் இந்த பிட் பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதும் தேர்வில் வெற்றி பெற இவ்வாறு செய்துள்ளார். அவ்வாறு செய்து விட்டு அந்த குறிப்புத் தாளை சுத்தமாக மறந்தும் விட்டுவிட்டாராம்.

தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்துவிட்டது. ஆனாலும் அதனை பாதுகாத்து தனது மகன்களுக்கு இவ்வாறான விடயங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நபர் கூறியுள்ளார்.

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா..? இந்த ஜூஸ்களை குடிங்க...!



காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.

ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை.

 மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி ஜூஸ், புதினா ஜூஸ் , கேரட் ஜூஸ், லெமன் ஜூஸ்,தர்பூசணி ஜூஸ்,வாழைப்பழ ஜூஸ்,கிவி ஜூஸ்,அன்னாசிபழ ஜூஸ்.

 குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....!



பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.

அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.

எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள்.

அதே சமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களும் ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும்.

அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களுடன் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்

நாகேஷ் - வாழ்க்கை வரலாறு




தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

 தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.


ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார்.

இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.


நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.


இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார்.


 ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார்.

 இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்.


தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.


தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.


“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.


ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.


ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.


இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.


‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.


நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன்.

சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான்.

அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!

ஜாக்கிசானின் '' போலீஸ் ஸ்டோரி '' - திரை விமர்சனம்



தன் மகளைத்தேடி பார் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு மகளை பார்க்கும் ஜாக்கிசான், பார் ஓனரை காதலிப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். தன் மகளை விட அதிக வயதில் இருக்கும் பார் ஓனரை காதலிப்பது ஜாக்கிசானுக்கு பிடிக்க வில்லை. அதனால் தன் மகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த பாரில் ஜாக்கிசான் தவிர 12 பேர் அங்கு வந்திருக்கிறார்கள். திடீர் என்று பார் ஓனர் தன் அடியாட்களை வைத்து ஜாக்கிசான் மற்றும் அங்கு வந்துள்ள 12 பேரையும் அடித்து பணயக் கைதிகளாக ஒரு ரூமில் அடைத்து வைக்கிறான்.இத்தகவலை அறிந்து போலீஸ், பார்க்கு வருகிறது.

பார் ஓனரிடம் அனைவரையும் விடும்படி கேட்கிறார்கள். அதற்கு ஓனர் சிறையில் உள்ள ஒரு சாதாரண கைதியை நீங்கள் விடுவிக்க வேண்டும். அப்போது தான் இவர்களை நான் விடுவிப்பேன். இல்லையெனில் ஒவ்வொருவராக கொல்லுவேன் என்று மிரட்டுகிறான்.இறுதியில் போலீஸ் அந்த சாதாரண கைதியை விடுவித்து ஜாக்கிசான் உள்ளிட்ட 12 பேரை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

முந்தைய படங்களில் உள்ள ஜாக்கிசானை நம்மால் காண முடியவில்லை. படத்தில் ஜாக்கிசானின் சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மற்றபடி சென்டிமெண்ட் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜாக்கிசானுக்கு வயதாகி விட்டதால் ஆக்‌ஷன் காட்சிகளை குறைத்துவிட்டார் போல இயக்குனர்.

ஜாக்கிசான் மகளாக வரும் ஜிங் டியன், அற்புதமான நடிப்பு திறனால் அனைவரையும் கவர்கிறார். பார் ஓனராக வரும் லியூ இ வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைக்கிறார்.
சுறுசுறுப்பான ஜாக்கிசானை வைத்துக்கொண்டு மிகவும் மெதுவான திரைக்கதையை வைத்து இயக்குனர் ஷெங் டிங் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். படத்தை விறுவிறுப்பே இல்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘போலீஸ் ஸ்டோரி’ ஏமாற்றமான ஸ்டோரி….

பாலிவுட்டிற்குச் செல்கிறார் விஜய்..?



இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த துப்பாக்கி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தயாராகிவருகிறது. ஹாலிடே என்ற பெயரில் தயாராகும் அப்படத்தில் அக்‌ஷய்குமார் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

தமிழில் இப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தியிலும் இயக்கவுள்ளார். இப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென்று படத்தின் ஹீரோவான அக்‌ஷய் குமார் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2012ல் பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்த படமான ரௌடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாடியது நினைவிருக்கலாம். இதனால் இப்படத்திலும் விஜய் நடிக்கவேண்டுமென அக்‌ஷய்குமார் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் ரௌடி ரத்தோர் படத்தைப் போல பாடல் காட்சியில் நடிக்காமல், ஓரிரு காட்சிகளில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இப்படத்திற்குப் பிறகு விஜய் நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.

இளையதளபதி விஜய் பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் டிவிட்டரில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

சிறுமியை பலாத்காரம் செய்த மாநகராட்சி ஊழியர் கைது..!



ஆலந்தூர்:சென்னை பரங்கிமலை நரசத்புரம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் வரதராஜ் (41). இவர் மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவரது மகளுடன் விளையாடுவதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று வரதராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வரதராஜ், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றிருக்கிறாள். அவளது உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிறுமியின் பெற்றோர் கேட்டபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதற்கிடையில் வரதராஜ் தலைமறைவாகிவிட்டார்.

இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தலைமறைவாக இருந்த வரதராஜை கைது செய்தனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தெலுங்கு 'ஜில்லா': போட்டியிடும் முன்னணி ஹீரோக்கள்..!



'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.

ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

சூப்பர் குட் நிறுவனமே தயாரிக்கவிருப்பதால் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தான் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரித்த போது, "படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்கள். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவாகிவிடும்.

ராம்சரண், சீரஞ்சிவி இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மையில்லை. விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டியிடும் நிலையில், மோகன்லால் வேடத்தில் நடிப்பதற்கும் சரியான நடிகர் ஒருவர் வேண்டும்." என்று கூறினார்கள்.

வீடுகள் விலை குறைவதை அறிவது எப்படி..?



 சென்னை உள்ளிட்ட நகரங்களில் புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது சமீபக் காலமாகச் சற்றுக் குறைந்துள்ளது. அதுபோல, அவற்றைக் கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதி எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்ற செய்திகள் வருகின்றன. இந்தத் தகவல்கள் ஆதாரபூர்வமானவையா அல்லது யூகத்தின் அடிப்படையில் ஆனவையா? அதைப்பற்றிப் பார்த்து விடுவோம்.

புதுமையான குறியீடு

சென்னையைப் பொறுத்தவரை 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கான வீட்டு வசதி - ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் மேற்கூறிய தகவலை உறுதி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும், வீட்டு வசதி மற்றும் மத்திய அரசின் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கான அமைச்சகமும் இணைந்து ஒரு குறியீட்டைத் தயாரித்து வருகின்றன.

முதல் கட்டமாக 27 முக்கிய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வீடுகள் மற்றும் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 300 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளன. வீடுகளைக் கட்டுவதற்குச் சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களும் முறையாகத் திரட்டப்படுகின்றன.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வீடுகள் மற்றும் ஃபிளாட்டுகள் கட்டப்படுவது அதிகரித்துள்ளனவா அல்லது குறைந்துள்ளனவா என்று ஆய்வு செய்து ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. இப்படியாக ஒரு நகரத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைச் சுட்டி காட்டும் குறியீடுதான் வீட்டுவசதி - ஸ்டார்ட்அப் இன்டக்ஸ்.

இந்தத் தகவல்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு காலாண்டுகளுக்கான தகவல்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு முதல் வாய்ப்பு

இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு நாட்டிலேயே முதன்முறையாகச் சென்னையைப் பற்றிய குறியீடு தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 2011ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களின் தொடங்கப்பட்ட புதிய வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 4,515 ஆக இருந்தது. ஆனால், அதே ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் 2946 வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் புதிதாகத் தொடங்கப்பட்டன.

மேலும் 2011ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் புதிய வீட்டு வசதி கட்டிடங்களைத் தொடங்குவதற்கு 1,200 அனுமதிகள் வழங்கப்பட்டன. அந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 770 அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அனுமதிகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குத்தான் வழங்கப்படுகின்றன.

தனி வீடுகள் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் குறைவாகவே தாக்கல் செய்யப்படுகின்றன. அந்தவகையில் பார்த்தால் சென்னையில் குறியீடு சரிந்துள்ளது என்றே அர்த்தம். இதேபோல பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் குறியீடு சரிந்தது.

நன்மைகள்:

இந்தக் குறியீட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

# முதலாவதாக, பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி.) அதிகரிக்கிறதா, சரிகிறதா என்பதைக் குறியீடு பிரதிபலிக்கிறது. உதாரணமாக 2009, 2010ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது போலவே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

# இரண்டாவதாக, மிக முக்கியமாக வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்படுகின்றன என்றால், அதற்கான தேவைகளும் கிராக்கிகளும் அதிகரித்துள்ளன என்பதையே அது காட்டுகிறது. மாறாக, குடியிருப்புகள் கட்டப்படுவது குறைகிறது என்றால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை என்பதையும் அதற்கான கிராக்கி குறைந்துள்ளது என்பதையும் காட்டுகிறது குறியீடு.

ஒரு பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும்போது அதன் விலை சரியும் என்பதும் நிச்சயமாக அதிகரிக்காது என்பதும் வெளிப்படை. எனவே வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

# இன்னும் சொல்லப்போனால், விலையை மேலும் குறைப்பதற்குப் பேரம் பேசவும் இது இடமளிக்கிறது. இது தவிர அனுமதி வழங்கப்பட்ட நாளுக்கும், கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நாளுக்கும் இடையே அதிகக் காலதாமதம் நேரிடுகிறதா என்பதையும் இந்தக் குறியீட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

# சென்னையைப் பொறுத்தவரை 2009-2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனுமதிகள் வழங்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன என்பது ஆறுதலான விஷயம்.

# தேசிய வீட்டு வசதி வங்கி சார்பில் வெளியிடப்படும் ‘ரெசிடக்ஸ்’ என்ற குறியீடு குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் விலை உயர்ந்ததா அல்லது சரிந்ததா என்பதை மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் அடுத்து வர இருக்கும் மாதங்களில் சந்தை எப்படி இருக்கும்? விலை குறையுமா அதிகரிக்குமா என்பதையும் சுட்டி காட்டக்கூடியது என்பதில் ஐயமில்லை.

விரைவில் 2012, 2013ஆம் ஆண்டுக்கான குறியீடு சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள 300க்கும் அதிகமான நகரங்களுக்கும் வெளிவர உள்ளது.

நாளைய தூண்களை காப்போம்..!



குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தைகளை தெய்வங்களாக கூட மதிக்க வேண்டாம். உயிருள்ள ஜீவன்களாக மதித்தாலே போதும் என்று சொல்லும் நிலைதான் இப்போது காணப்படுகிறது. தாய்ப்பாலை கூட விற்க ஆரம்பித்து விட்ட நிலையில், குழந்தைகள் எம்மாத்திரம்? குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் பழக்குதல் என்று மனிதத்தன்மையே இல்லாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் ஒரு ஆண்டில் சுமார் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமான விஷயம், 11 ஆயிரம் குழந்தைகள் என்ன ஆகிறார்கள் என்பதே தெரியாததுதான். பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்றாலும், சில குழந்தைகள் பெற்றோரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஓடிச் செல்வதும் நடக்கிறது.இந்த குழந்தைகள், தனியாகவோ அல்லது ஓரிருவர் சேர்ந்தோ கண் காணாத இடத்துக்கு சென்று விடலாம் என்ற அசட்டு தைரியத்துடன் திருட்டு ரயில் ஏறி விடுகின்றனர். இக்குழந்தைகள் ரயில் நிலையங்கள் அல்லது பஸ் ஸ்டாண்டுகளில் சிக்கும்போது, போலீசார், பெற்றோர்களை அழைத்து ஒப்படைப் படைக்கின்றனர்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில், குழந்தைகள் காணாமல் போவது அதிகளவில் நடக்கிறது. 60 சதவீதம் குழந்தைகள், வீட்டில் பெற்றோர், உடன்  பிறந்தோர் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே வெளியேறுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மாநில உயர் நீதிமன்றம், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் தன்னந்தனியாக சுற்றித்திரியும் குழந்தைகளை பிடிக்க குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், மீட்கப்படும் குழந்தைகளை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க கூடாது என்றும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம்தான் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் குழந்தைகளின் பிரச்னையை தெரிந்து கொண்டு, விருப்பம் இருந்தால் அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தல் அல்லது அவர்களின் மனதில் நல்லெண்ணங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரத்தில் உள்ள முக்கிய காரணங்கள், குழந்தைகளை விற்கவும், பிணைத்தொகை வசூலிக்கவும், பிச்சை எடுக்க வைக்கவும் என்று வேறு பல காரணங்களினாலும்தான் அதிகம் கடத்தப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் காணாமல்போகும் வழக்குகளை கிடப்பில் போட்டு விடாமல், உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி விசாரிக்க வேண்டியது அவசியம். பிடிபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கித்தர வேண்டியது அதை விட முக்கியமானது.

சிறை பிடிக்கப்பட்ட கோச்சடையான்…! கவலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!



கோச்சடையான் படத்துக்கு கன்னித்தீவு என்று தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது!

பின்னே…வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறதே…!

கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, கேரளா என பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்த இளைஞர் படை இரவு பகலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஃபைனல் டச்சாக சில வேலைகள் செய்ய வேண்டி இருந்ததால், அந்த வேலையை சீனாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவ்வப்போது சீனாவுக்கு விசிட் அடித்து வேலைகளையும் மேற்பார்வையிட்டார்.

சி.ஜி. பணியை கவனிக்கும் சீன நிறுவனம் கூறியதன்பேரிலேயே இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, அதாவது பொங்கல் அன்று கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக ட்விட்டரில் அறிவித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அடுத்தகட்டமாக தியேட்டரை பிளாக் பண்ணும் வேலைகளிலும் இறங்கினர். ஆனால் சீன நிறுவனம் முதலில் சொன்னபடி பணியை முடிக்கவில்லை. எனவே, கோச்சடையான் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாமல் போனது.

தற்போது என்ன நிலவரம்..?

20 சதவிகித பணிகள் இன்னும் பாக்கி இருக்கிறதாம். எனவே மே மாதம்தான் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆகும் என்பதே இப்போதைய நிலவரம். குறிப்பிட்டநிறுவனத்திடமிருந்து கோச்சடையான் வேலையைப் பிடுங்கி வேறு இடத்தில் கொடுக்கலாமா என்றால் அதற்கும் உடன்பட மறுக்கிறார்களாம்.

இத்தனை வேகமாக படத்தை எடுத்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…மே மாதமாவது ரிலீஸ் பண்ண முடியுமா…அல்லது மேலும் தாமதப்படுத்திவிடுவார்களா? – என்ற கவலையில் இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

கோச்சடையானை சீனாவில் சிறை வச்சுட்டாங்களே…