Tuesday 18 March 2014

நீ வாங்குற அஞ்சுக்கும்,பத்துக்கும் இது தேவையா சிவகார்த்திகேயா...!




சிவகார்த்திகேயன் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘குண்டர்கள்’ சத்யம் தியேட்டரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் செய்ததால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாகப் போட்டு சில கோடிகளை செலவழித்தால் போதும். பல கோடிகளை கல்லா கட்டி விடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் பெருங்கனவு.


இதனால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.


அதிலும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் சிவகார்த்திகேயனை தனது கம்பெனி ஆர்டிஸ்ட்டைப் போலவே ஆக்கி விட்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அடுத்தடுத்து மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனை வைத்து மதன் தயாரித்த எல்லா படங்களுமே நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தவிர கார் வாங்கிக் கொடுப்பது, அவரது சொந்த விஷயங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வது என்று அவரை அப்படியே வளைத்துப் போட்டிருக்கிறார்.


இந்த நிலையில் இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா மோத்வானி நடித்த ‘மான்கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடைபெற்றது. இந்தப்படத்தை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கிறார்.


பொதுவாக இதுபோன்ற விழாக்களுக்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தால் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விழாவுக்கு செல்ல அனுமதியளிப்பார்கள். ஆனால் ‘மான் கராத்தே’ ஆடியோ பங்ஷனில் பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் உள்ளே நுழைந்தபோது ‘பவுன்சர்கள்’ என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தி சேகரிக்க எங்களுக்கே இடம் இல்லேன்னா யாருக்காக இந்த பங்ஷனை நடத்துறீங்க..? என்று வந்திருந்த பத்திரிகையாளர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வந்திருந்த திரையுலக பிரபலங்களையும் குண்டர்கள் உள்ளே விடாமல் தடுத்ததால் அவர்களும் கோபத்துடன் விழா நடந்த இடத்தை விட்டு வெளியேறினர்.


பத்திரிகையாளர்ளிடம் ஐ.டி கார்டையும், திரையுலக பிரபலங்களிடம் இன்விடேஷனையும் கேட்டு பார்த்து உள்ளே அனுமதித்த சத்யம் தியேட்டர் ‘திறமைசாலி’? ஊழியர்கள் ரோட்டில் வந்தவன், போனவனையெல்லாம் எந்த முறையான பரிசோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்து விட்டார்கள் போலும். சுமார் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த தியேட்டரில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்தார்கள். இதனால் 9 மணி ஆடியோ பங்ஷனுக்கு சுமார் 9:30 மணிக்குள்ளாகவே பார்க்கிங் ஏரியா நிரம்பி வழிந்தது.


ரசிகர்கள் என்ற போர்வையில் விழாவுக்கு முறையான அனுமதி பெறாத அள்ளக்கைகளே பத்திரிகையாளர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளாக மாறியிருந்தனர்.


 அதுமட்டுமில்லாமல் இது குறித்து விழாக்குழுவினர்களிடம் புகார் அளித்தும் கூட அவர்களும் அந்த அள்ளக்கை கூட்டத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறினர்.


இது ஒருபுறமிருக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் விஜய்டிவி மட்டுமே எந்த இடைஞ்சலும் இல்லாமல் விழாவை நான்கு மூலைகளிலும் கேமராக்களை வைத்துக் கொண்டு வளைத்து வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தனர். விழா நடந்த மேடைக்கு அருகில்


சிவகார்த்திகேயனை பாதுகாக்க வந்திருந்த குண்டர்கள் அத்தனை பேரும் தூண்கள் போல நின்று கொண்டிருந்ததால் வந்திருந்த மற்ற டிவி சேனல்கள் விழாவை சிறப்பான முறையில் படம் பிடிக்க முடியாமல் கொதித்துப் போய் வெளியேறினார்கள்.


இதே சத்யம் தியேட்டரில் தான் போன வாரம் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்த விழாவுக்கு மும்பையிலிருந்து நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப் உட்பட சிவகார்த்திகேயனை விட நூறு மடங்கு ரசிகர்களிடையே பிரபலமான திரையுலக பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள். அப்பேர்ப்பட்ட விழாவில் கூட மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் சரியான முறையில் எந்தவித கெடுபிடியும் காட்டப்படாமல் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதுகாப்புக்காக குண்டர்கள் வரவழைக்கப்படவில்லை.


ஆனால் நடித்து அரை டஜன் படங்கள் மட்டுமே ரிலீசாகியிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயனின் பாதுகாப்புக்கு 50-க்கும் மேற்பட்ட குண்டர்களா…? என்று விழாவுக்கு வந்தவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்ததோடு இதெல்லாம் ‘ரொம்ப டூ மச்’ என்றும் செம நக்கலடித்தனர்.


 எப்போதுமே எளிமைக்கு சொந்தக்காரர் போல தன்னை காட்டிக்கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸும் மும்பை ஸ்டைலில் விழாவை நடத்தை ஆசைப்பட்டு கடைசியில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும், மீடியாக்களின் வெறுப்பையும் சம்பாதித்தது தான் மிச்சம்.


சத்யம் தியேட்டரில் இதுவரை ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம் சூர்யா என எத்தனையோ முன்னணி ஹீரோக்கள் கலந்து கொண்ட ஆடியோ பங்ஷன்கள் நடந்துள்ளது. ஆனால் அந்த பங்ஷன்கள் எல்லாமே எந்தவித முரண்பாடும் இல்லாமல், சிக்கலும் இல்லாமல், மிக நேர்த்தியாக, அமைதியான முறையில் தான் நடந்துள்ளது.


அதையெல்லாம் பார்த்து பழக்கப்பட்ட திரையுலகினருக்கு ‘மான் கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷன் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா… என்று முணுமுணுக்க வைத்ததோடு, அவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு எந்த முறையான திட்டமிடலும் இல்லாமல் நடந்தேறியது.


புகழின் போதை தலையின் உச்சிக்கு ஏறி, ஒரு கட்டத்தில் காணாமல் போனவர்களின் கண்ணீர் கதைகள் தமிழ்சினிமாவில் ஆயிரம் உண்டு.

இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்தும் கூட ரசிகர்களின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன் எப்படி இந்த மோசமான புகழ் போதையில் சிக்கினார் என்பதே அவரின் நலம் விரும்பிகளின் நியாயமான கேள்வி?