Sunday 9 February 2014

சின்னத்திரைக்கு வந்தார் சிநேகா...!



காதல் திருமணம் செய்துகொண்ட சிநேகாவும், பிரசன்னாவும் இப்போது தனிக் குடித்தனம் நடத்தி வருவது சினிமா வட்டாரமே தெறிந்த செய்திதான்!

 ஆனால் தான் இதுவரை சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்துக்களையும், பணத்தையும், நகை நட்டுகள் எல்லாவற்றையும் பிறந்த வீட்டுக்கே விட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் என்ற தகவல் கொஞ்சம் சங்கடத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தத்தான் செய்தது. இப்போது தியாகராயநகரில் வாடகை பிளாட்டில் வசிக்கிறார்கள்.

 சிநேகா, பிரசன்னா இருவருக்குமே சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் கைவசம் இல்லை. அதனால் வருமானமும் கம்மி!

 பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்த அழைப்புகளை வேண்டாம்... முடியாது... என்று இதுவரை மறுத்து வந்தார் சிநேகா! இப்போது வேறு வழி இல்லாமல் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.

 "சன் டிவி'யில் ஒளிபரப்பாக இருக்கும் மிகப்பெரிய ""கேம் ஷோ'' ஒன்றில் பிரதானமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிநேகா! பளபளக்கும் பட்டுப் புடவையிலும் ஜொலி ஜொலிக்கும் நகைகளிலும் மின்னலடிக்கிறார். இதற்காகவே சன் டிவி படப்பிடிப்பு அரங்கில் பிரம்மாண்டமான "செட்' போடப்பட்டு கடந்த 11-ந் தேதி முதல் சூட்டிங் சுடச்சுட நடந்து கொண்டு இருக்கிறது.

 சிநேகாவின் சிரிப்பழகையும், கொஞ்சிக் கொஞ்சி பேசும் தமிழையும், மிக விரைவில் சன் டிவியில் காணப் போகிறார்கள் ரசிக பெருமக்கள்! வெள்ளித்திரையில் இருந்து விடைபெற்று விட்ட சிநேகாவை காணவில்லையே? என்று காத்திருந்த கண்களுக்கு விருந்தாக அமையப் போகிறது இந்த சின்னத்திரை "கேம் ஷோ'!

"உ - "திரைவிமர்சனம்...!



எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் "உ எனும் பிள்ளையார் சுழியையும் அதைத்தொடர்ந்து ஒருசில பட்டைகளையும் போட்டு அதில் பொட்டும் வைத்து தொடங்குவது நம் வழக்கம்!

இத்திரைப்படத்தின் நாமகரணம் எனப்படும் டைட்டிலே "உ என்பதும், சில நாட்களுக்கு முன் டிரையிலராக வெளியிடப்பட்டு திரையிட்டபோது "உ எனும் பிள்ளையார் சுழி டைட்டிலாக ஒளிர்ந்தபோது பின்னணியில் ஒலித்த ஓசைகளால் இப்படம் மீடியாக்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது! நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறிமுக இயக்குநர் ஆஷிக், அந்த ஊலை ஓசையை ஒழித்து கட்டிவிட்டு படத்தை வெளியிட்டிருப்பதற்காகவே இயக்குநரை முதற்கண் பாராட்ட வேண்டும்!

அடுத்ததாக ஒரேமாதிரி கதை சொல்லும் தமிழ் சினிமாக்களில் இருந்து ஒரேயடியாக விலகி, இப்படியும் படமெடுக்கலாம் என தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக ஒரு "ரூட்டை போட்டுக் கொடுத்து அதற்கு பிள்ளையார்சுழி போட்டிருப்பதற்காக இயக்குநரை மீண்டும், மீண்டும் பாராட்டியே ஆக வேண்டும்!

கதைப்படி வழுக்கை வசப்பட்டும், வாழ்க்கை வசப்படாத துணை-இணை சினிமா இயக்குநர் கணேஷிற்கு ஒரு படக்கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன் அறை "கம் துறை நண்பர்களை தன்னுடன் இணைத்து பணிபுரிய அழைக்கிறார். அவர்கள் கணேஷை கேலி செய்வதோடு "உன்னால் எல்லாம் படம் இயக்க முடியுமா?! என கேள்வியும் கேட்டு "சவுடால் சவாலும் விடுகின்றனர்!

இதில் பீல் ஆகும் கணேஷ், புல்மப்பில் நியூசென்ஸில் போலீஸில் சிக்குகிறார். அங்கு தன்னை மாதிரியே நான்சென்ஸ் புட்டி, குட்டி, பெட்டி கேஸ்களில் சிக்கி பேஜாராகி வீற்றிருக்கும் 4 இளைஞர்களை சந்திக்கும் கணேஷ், அந்தநால்வரையுமே தன் உதவியாளர்கள் ஆக்கி உருப்படியான சீன்களை பிடித்து ஒருமாதிரி ஜோரானதொரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பக்குலனிடம் சொல்லி படமெடுக்க கிளம்புகிறார்.

அவரை அவரது அறை-துறை, அரை-குறை நண்பர்கள் தங்களது சாவலில் ஜெயிப்பதற்காக ஆள்பலம் காட்டி படமெடுக்க விடாமல் தடுக்க பார்க்க, அவர்களை தனது அறிவுபலத்தால் கணேஷ் ஜெயிப்பதும், படமெடுத்து ரிலீஸ் செய்வதும்தான் "உ படத்தின் கதை! உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயரும் கணேஷின் இந்த வெற்றிக்கதையுடன் அவர் இயக்கும் படக்கதையையும் கலந்துகட்டி கலர்புல்லாக கதை சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஆஷிக்கை இன்னும் ஒருமுறை பாராட்டலாம்!

தம்பி ராமைய்யா, வருண், மதன்கோபால், "ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சவுந்திராஜா, காளி, ராஜசிவா, டீப்ஸ், ஆஜித், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், "யோகி தேவராஜ் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் கணேஷ் - தம்பி ராமைய்யா, புரடியூசர் பக்குலன் - பயில்வான் பற்றி சிலநேரங்களில் வாயால பேசுறார், சில நேரங்கள்ல பேசுறார்... என அவரது வாயுத்தொல்லை பற்றிபேசும்போது தியேட்டர் அதிர்கிறது.

எல்லோரையும் கலாய்க்கும் தம்பி ராமைய்யாவையே கலாய்க்கும் "கவுண்டர் பிராக்டீஸ், புரடியூசர் பக்குலன் - பயில்வான் ரங்கநாதன், மணி சார் ஓ.கே. சொன்னாதான் ஓ.கே. என கதைகேட்பாளர் மணி - "யோகி தேவ்ராஜ்க்கு தரப்படும் பில்-டப் எல்லாமே படத்திற்கு பலவந்தமாக, அதேநேரம் படுபாந்தமாகவும் பலம் சேர்க்கும் பாத்திரங்கள் என்பது சூப்பர்ப்! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது நம்முன் நிற்கும் ஒரே கேள்வி.?!

அபிஜித் ராமசாமியின் இசை, முருகன் மந்திரத்தின் பாடல்வரிகள், ஜெயபிரகாஷின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பலங்களுடன் எம்.ஆர்.ராதாவை இம்மிட்டேட் செய்து வில்லனும் அவரது கையாட்களும் பேசி போரடிக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் சலிப்பு உள்ளிட்ட பலவீனங்களும் இருந்தாலும், ஆஷிக்கின் எழுத்து-இயக்கத்தில் "உ - "ஓஹோ!

டைப்-2 நீரிழிவு நோய்க்கு தயிரே மருந்து...ஆய்வில் தகவல்...!!!




தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின்(தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்.

உயர்ரக புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களுக்கு பால் பொருட்கள் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.

ஆனால் கொழுப்பு சத்தும் அதில் நிறைவாக இருப்பதால் உணவு விதிமுறைகள் மக்களை இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றன. ஆயினும் குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் 85 சதவிகித அளவு தயாரிக்கப்படும் தயிரினை ஆய்வு செய்யும்போது நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது.

இந்த சோதனை தனியாரிடத்தில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை முடிவுகள் சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன.

மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் நமக்கு அதிகம் கிடைக்கும்போது தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நமது உடலுக்கு நன்மை தரும் என்று தெரிவிக்கும் இத்தகைய ஆய்வுகளும் நமது சுகாதாரத்திற்கு உறுதியளிக்ககூடிய ஒன்றாகும் என்று மருத்துவர் பரோஹி கூறியுள்ளார்.

பாத்திரங்களாலும் உண்டு பலன்..!



உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.

பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.

உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.

செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.

பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள். அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.
வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர். படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.


செம்பு பாத்திரம்

தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர். சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள். சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது. இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது. உலக நல நிறுவனம் குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.


தூக்கம்

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.

விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் 'அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும். தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.

வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது,மேற்கு.

பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது தெற்கு.

எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம், வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது. பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள். குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.

கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர். நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம். தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.

தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும். இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.

எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.

பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்)..!



உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் ‘பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.

கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது...!



ஆவி உலக ஆராய்ச்சிகள்

ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு.

ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

 திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...

சேரன் படத்துக்கே தியேட்டர்கள் கல்தாவா...?



இயக்குனர் சேரன் இயக்கத்தில் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு ஆந்திராவில் போதுமான அளவு திரையரங்குகள் கிடைக்காததால் இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது சேரனின் ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் வெளியீட்டிற்கு ஆந்திராவில் போதுமான திரையரங்குகள் கிடைக்காதகாரணத்தால் தமிழிலும் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகப் போராட வேண்டியிருக்கும் என்றும் சேரன் கூறியுள்ளார்.

சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் அதே நாளில், டிவிடி மற்றும் சேட்டிலைட்டிலும் வெளியிடவுள்ளதாகச் சேரன் அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டுக்குப் போகமாட்டேன் - நயன்தாரா..!



கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான மனாசினக்கரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களில் இன்றளவும் முன்னணி நடிகையாக இருந்துவரும் நயன்தாரா தனக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதே தனக்குத் திருப்தி அளிப்பதாக இருப்பதாகவும், ஹிந்தியில் நடிக்கும் ஆசை தற்போதைக்கு இல்லை என்றும் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படியே தான் நடித்துவருவதாகவும், இயக்குனர்களின் நடிகையாக இருப்பதே தனது விருப்பமென்றும் கூறியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முக்கியமானவராகத் திகழ்கிறார். நயன்தாரா, உதயநிதி நடிப்பில்
உருவாகியிருக்கும் இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவுடன் இது நம்ம ஆளு திரைப்படத்திலும், உதயநிதியின் நண்பேன்டா திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்துவருகிறார்.

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் விந்தணுக்களை அதிகரிக்கும்...



ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.

மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.

சரி, இங்கு கேரட்டை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இனிமேல் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வீர்கள்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமானம்

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

வயிற்று கோளாறு

கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.

கொலஸ்ட்ரால்

ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.

ஆரோக்கியமான கண்கள்

கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பல் பராமரிப்பு

கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வலியுடைய மூட்டு வீக்கம்

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.

நீரிழிவு

நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

மலச்சிக்கல்

குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.

இரத்த அழுத்தம்

கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

எண்ணைய் பசை சருமத்திற்கு - செய்ய வேண்டியவை...!



*ஒரு சிலருக்கு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் "ஃபேஸ் வாஷா"ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவா மசாஜ் பண்ணணும்.

*இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குற துவாரங்கள்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறிடும். முகமும் பார்க்கப் படு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.

*இதே சிசிக்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும்.

*குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்னிக்கு மட்டும் உடம்புக்கு சோப் போடாம, கடலைமாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.

*தலைமுடியைப் பராமரிக்கிறதுக்கு சோம்பல்படவே கூடாது. மாசம் ஒரு தடவை ஹென்னா போடணும்.

ஹென்னா எப்படி தயாரிப்பது?

*முந்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் எல்லாத்தையும் தண்ணீர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடணும். மறுநாள் இந்தக் கலவையோடு முட்டையோட வெள்ளைக் கரு, தயிர் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக் குளிக்கணும். தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்னிக்கு மட்டும் முடிக்கு ஷாம்பூ போடாம, தண்ணியாலதான் அலசணும். அப்போதான் அதோட சாரம் தலையில தங்கும்.

*அழகுல உதட்டுக்கு முக்கிய பங்கு இருக்கு. தொடர்ந்து லிப்ஸ்டிக் உபயோகிச்சா உதடு கருத்துப் போயிடும். எப்பவும் லிப் கிளிசரின் அல்லது லிப் கார்ட் தடவிட்டு, அதுக்கு மேலதான் லிப்ஸ்டிக் போடணும். இதனால, உதட்டோட இயல்பான நிறம் மாறாது.

*தினமும் தூங்கப், போறதுக்கு, முன்னாடி கை, கால்களை சுத்தமா கழுவிட்டு ஆலீவ் எண்ணெய் தடவணும். இப்படி ரெகுலரா செஞ்சா சருமம் பட்டுப்போல மிருதுவா மாறும்."

*ரெகுலரா பார்லர் போய் ஐ-ப்ரோஸ் ட்ரிம் பண்ணிக்கலாம். ஹேர் கட்-டும் செய்துக்கலாம். இப்படி நம்மள நாமே அழகுபடுத்திக் கொண்டால் எப்பவுமே நாம அழகுதான்.