Sunday 16 February 2014

வாழைப்பழத்தோலை வைத்து நீரை சுத்தமாக்கலாமாக்கும்..!



இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ரசாயனம் மூலம் குடிநீரை சுத்திகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன.

இது பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதார சீர்கேட்டையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே குறைந்த தரத்திலான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை அளிக்கின்றன. இத்துடன் தங்களது தயாரிப்புகளில் எந்தெந்த ரசாயனம், எந்த விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடுவதில்லை. இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கான கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற சுத்திகரிப்பானை நுகர்வோருக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.

இந்நிலையில் இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!என்று செய்தி வெளியாகியுள்ளது! என்ன? ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ…

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!

0 comments:

Post a Comment