Monday 17 February 2014

வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் முறை - தமிழக மாணவர்..!

வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தமிழக மாணவர்..!



விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித் ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர் கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இந்நிலையில் அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், இந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. அப்போது மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு இம்மாணவர் “டெலி கான்பரன்சிங்’ மூலமாக விளக்கம் கொடுத்தார். இவரைப்போல தூத்துக்குடி மாவட்டம் ஏரல் இன்ஜினியர் ஜாபர் அலியின் “மேத்டிஸ்க்’ கணித உபகரணம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமைப் படத்தக்கது.

பள்ளி மாணவர்களிடயே அறிவியல் கண்டுபிடிப்பு மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அறிவியல்சங்கம், ஆண்டு தோறும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த போட்டியை நடத்தி வருகிறது. அத்துடன் சிறந்த கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து, விருது பதக்கங்களை வழங்கிவருகிறது. முதல் மூன்று வெற்றியாளர்களை, சர்வதேச போட்டிகளுக்கு, இந்திய நாட்டின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு,கடந்த ஆறு மாதமாக இந்தியா முழுவதும் நடந்தது. தமிழகத்திலிருந்து மட்டும் 4 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு,கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் 30 பேர் தேர்வானர்.

அவர்களுக்கு ஜன., 11ல் சென்னையில் போட்டிகள் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம்,வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவன் மா.டெனித் ஆதித்யா தேசிய அளவில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கம் கோப்பையை வென்றார். இவர் ஏற்கனவே பல்வேறு மாநில விருதுகளையும் மத்திய அரசின் தங்கப்பதக்கம் விருது பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தனது கண்டு பிடிப்பிற்காக காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். அதே சமயம் மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில் இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லாங்வுட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன் இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன் பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக்காவில் உள்ள கல்வித்துறை நிபுணர்கள் கல்லூரி பேராசிரியர்கள் கிராமப்புற மேல்நிலை துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதலாவதாக இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின் வாழை இலை பதப்படுத்தும் தொழில்நுட்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து காட்டப்பட்டது. அப்போது மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, “டெலிகான்பரன்சிங்’ மூலம் பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து பேசினார்.


இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அடுத்த உச்சி மாநாட்டின்போது நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

0 comments:

Post a Comment