Thursday 27 February 2014

பாடலின் சரணம் பாட முடியாமல் மூன்று முறை தவித்த பாலு..!



மூன்று முறையும் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலின் சரணம் பாட முடியாமல் தவித்த பாலு பார்த்தசாரதி சுவாமி சபையின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பாதியில் பாடலை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பாலுவின் குழுவில் டி. எம். எஸ். பாடல்களைப் பாடும் பாடி வாசு, பாலுவிற்குப் பிறகு இரண்டு பாடல்களைப் பாடினார். மேடையிலிருந்து உள்ளே வந்த பாலு தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை உருவாயிற்று என்று புரியாமல் குழம்பினார்.

இரண்டு பாடல்கள் இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்த பாலு, ரசிகர்களிடம் ‘நான் மீண்டும் பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடப் போகிறேன்’ என்று கூறிவிட்டு பாட்டைப் பாட, பாடல் வெகு நேர்த்தியாக அமைந்தது. ரசிகர்களும் அமோகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்து பாலுவை உற்சாகப் படுத்தினார்கள்.

அதற்குப் பிறகு ஆயிரக் கணக்கான கச்சேரிகள் நடந்து விட்டன. இன்றுவரை அது மாதிரி ஒரு சம்பவம், பாலுவின் கச்சேரிகளில் நடைபெற்றதேயில்லை. அதேபோல், அன்று அந்தக் கச்சேரியில் அப்படி நடந்ததற்குக் காரணமும் புரியவில்லை.

கல்லூரி மாணவராக இருந்து, படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் பாடகரான பாலு கல்லூரியில் கச்சேரி செய்ய வேண்டுமானால், இன்று மிகவும் கவனமாக நடந்து கொள்வார்.

கல்லூரியில் படிக்கும் இளநெஞ்சங்களின் உள்ளங்களை நன்கு அறிந்தவர் பாலு. ஒரு சமயம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம். ஐ. டி. (மெட்ராஸ் இன்ஸ்டியூட் அப் டெக்னாலஜி) மாணவர்கள் தினத்திற்கு கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். பாலு சினிமாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம்.

கச்சேரியன்று, பாலுவின் குழுவில் பாடிக் கொண்டிருந்த திருமதி சசிரேகாவிற்கு ஒரு சினிமா பாடல் பதிவு ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தது. பாலு தன்னுடைய இசைக் குழுவை இளையராஜாவின் தலைமையில் அனுப்பி விட்டு சசிரேகாவை உடன் அழைத்துக் கொண்டு ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்றார் பாலு.

சினிமா பாடல் பதிவு என்பது சில சமயங்களில் பத்து பதினைந்து டேக்குகள் கூட எடுக்கும். இந்தக் காலத்தில் உள்ளபடி தனித்தனியாக இசையைப் பதிவு செய்து கொள்ளக் கூடிய கருவிகள் அப்போதில்லை. அதனால் ஒரு வாத்தியம் வாசிப்பவர் தவறு செய்தாலும் மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும் அன்று அப்படிப்பட்ட சில தவறுகள் காரணமாக ரிக்கார்டிங் இரவு 7.30 மணிக்குத்தான் முடிந்தது.

பாலு எம். ஐ. டி. போய்ச் சேரும்போது மணி இரவு 8.15. மாணவர்கள் கோபத்திலிருந்தார்கள். அவர்களை விட மேலும் அதிகமான கோபத்தோடு பாலுவை வரவேற்றார் இளையராஜா. மேடைக்குச் சென்றார் பாலு பல திக்குகளிலிருந்து காகித அம்புகள் பறந்தன. மாணவர்களின் நியாயமான கோபத்தை மதித்து மெளனமாக இருந்தார் பாலு. ஒரு மாணவன் ஒரு முழு அப்பிளைத் தூக்கி பாலுவை நோக்கி எறிய, பாலுவிற்கு பள்ளி நாட்களில் விளையாடிய கிரிக்கெட் உதவி செய்தது.

அப்பிளை கெட்ச் பிடித்தார். பாலுவின் இந்தச் செய்கைக்கு மாணவர்களிடமிருந்து ஒல்ரவுண்ட் கைதட்டல் கிடைத்தது. உடனே பாலு மைக்கில் ‘இசை நிகழ்ச்சிக்குப் பிறகு டின்னர் சாப்பிடும் நேரத்திற்குத் தான் நான் வந்திருக்கிறேன். நான் பசியோடுதான் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு என்னுடைய நண்பர் எனக்கு அப்பிளைக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு நன்றி இதைச் சாப்பிட்டுவிட்டு அனைவரும் போதும் போதும் என்று சொல்லும் வரை பாடுகிறேன்’ என்று கூறி அப்பிளைக் கடித்துச் சாப்பிட நிலைமை சற்று அடங்கியது. அவ்வளவுதான் அன்று இரவு பன்னிரண்டு மணி வரை பாலுவும், அவர் இசைக் குழுவும் பாடி மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். கச்சேரி முடிந்ததும் அப்பிள் வீசிய மாணவர் பாலுவைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அதற்கு பாலு என்ன சொன்னார் தெரியுமா?

தம்பி நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க, அப்பிள் அடிப்பதோடு நிறுத்திக் கொண்டீங்க. உங்கள் கோபத்தில் அப்பிளுக்குப் பதிலாக கல்லை எறிந்தால் கூட நான் உங்களிடம் கோபித்துக் கொண்டிருக்க முடியாது.’

அன்றிலிருந்து இன்றுவரை மாணவர்களுக்காக நடக்கும் கச்சேரி என்றால் பாலு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். மற்றொரு முறை மாணவர்கள் மத்தியில் மறக்க முடியாத சண்டை செய்துள்ளார் பாலு. சண்டை யாருடன் தெரியுமா?

பிரபலமான இயக்குநர் பாரதிராஜாவுடன் தான் சண்டை. நடந்த இடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி. ‘பாரதிராஜாவுக்கும், எஸ். பி. பி.க்கும் சண்டை வருவானேன்?’ என்கிறார்களா?

0 comments:

Post a Comment