Wednesday 19 February 2014

ஹாலிவுட்டை நோக்கி தமிழ் சினிமா..! - உலகநாயகன் கமல்



’’தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும்’’ என்று கமல்ஹாசன் கூறினார்.

சினிமா படவிழா

எழுத்தாளர் ராஜு முருகன் முதன்முதலாக டைரக்டு செய்துள்ள ’குக்கூ’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் சூர்யா பேசும்போது, ’’நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல்ஹாசன் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் சித்தப்பா என்றும் அழைத்து இருக்கிறேன். அண்ணன் என்றும் அழைத்து இருக்கிறேன். சித்தப்பா என்பதை விட, அண்ணன் என்றால் இன்னும் நெருக்கம் வருவதால், அண்ணன் என்றே அழைக்கிறேன்’’ என்றார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-

’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்த படத்தை தயாரித்த “பாக்ஸ்” நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.

நான், அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை நம்புபவன். ‘குக்கூ’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, இந்த படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் புலப்படுகிறது.

நாவல்கள்

சிறந்த நாவல்களை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று 35 வருடங்களாக சொல்லி வருகிற கூட்டத்தை சேர்ந்தவன், நான். வைக்கம் முகமது பஷீர் , ராஜுமுருகனுக்கு மட்டுமல்ல. எனக்கும் கதாநாயகன் தான். அங்கிருந்துதான் வேர் தொடங்குகிறது. சேரன் சொன்ன பொறாமை எனக்கும் உண்டு. என் ஊரில், என் தம்பிமார்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்கள் என்று பெருமைப்படுகிறபோது, பொறாமை காணாமல் போய்விடுகிறது. என் பொறாமை,
ஆரோக்கியமான பொறாமை.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் ரெயிலில் பயணித்தபடி, காற்றை தொட்டு செல்வது போல் காட்சி வருகிறது. இதைத்தான் நண்பர் வைரமுத்து பார்வையற்றவர்களை பற்றி சொல்லும்போது, ’’உங்களுக்கு இரண்டு கண்கள். எங்களுக்கு இருபது கண்கள், நகக்கண்கள்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நட்சத்திரம்

சினிமா, வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள். திறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும், சூர்யா செயலாலும் அதை செய்து காட்டியிருக்கிறோம்.

எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், நீ எனக்கு மகனா? என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன்.

செழுமையான பாதை

சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ’’இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே?’’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாக நான் நினைக்கிறேன்.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கேயார்

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, டைரக்டர்கள் சேரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெற்றிமாறன், அட்லீ, பட அதிபர்கள் யு.டி.வி. தனஞ்செயன், கதிரேசன், மதன், நடிகர்கள் விஜய்சேதுபதி, தினேஷ், நடிகை மாளவிகா, ஒளிப்பதிவாளர் வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் வண்ணதாசன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், பாடல் ஆசிரியர் யுகபாரதி மற்றும் பலர் பேசினார்கள்.

படத்தின் டைரக்டர் ராஜுமுருகன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment