Sunday 23 March 2014

6 கோடியில் பிரம்மாண்ட செட் - இது விக்ரமின் ஐ..!




தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையிலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இருந்து இன்று வரையிலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களைக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.

சியான் விக்ரம், எமிஜேக்சன் நடிப்பில் அவர் இயக்கிவரும் ஐ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி.

அந்த ஒரு பாடல் காட்சியினை தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மஹா பிரம்மாண்டமான பாடல்காட்சியாக உருவாக்கக் கடுமையாக உழைத்துவருகிறது ஐ படக்குழு. பாடல்காட்சியின் பட்ஜெட்டைக் கேட்டு, இளம் இயக்குனர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.

விக்ரம், எமிஜேக்சன் நடனமாடவுள்ள இப்பாடல் காட்சிக்காக சுமார் 6 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில்
இப்பாடல்காட்சி படமாக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

தற்போதைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எடுக்கும் மொத்தப் படத்தின் செலவே ஒன்று அல்லது இரண்டு கோடிகளைத் தாண்டாத நிலையில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டுமே 6 கோடியென்றால் யார்தான் ஆச்சர்யப்படமாட்டார்கள்?

ஐ திரைப்படம் வருகிற மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment